சென்னை, டிச. 4–
தவெக தலைவர் விஜய்யின் ரோடுஷோவுக்கு புதுச்சேரி அரசு அனுமதி கொடுக்காததால், பொதுக்கூட்டத்தையும் ரத்து செய்தார்.
தவெக தலைவர் விஜய் நாளை புதுச்சேரியில் ரோடுஷோ நடத்துவதற்கு கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பே அனுமதி கோரினார். ஆனால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை கருத்தில் கொண்டு புதுச்சேரி போலீசார் இதற்கு அனுமதி மறுத்தனர்.
இதனைத் தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமியை தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், 2 முறை நேரில் சந்தித்து ரோடுஷோ நடத்த அனுமதி அளிக்க கோரிக்கை வைத்தார். முதல்வருடனான சந்திப்பின் போது, போக்குவரத்து நெரிசல் இல்லாத, சாலை அகலகமாக உள்ள சிவாஜி சிலை முதல் கொக்கு பாாக் வரை 1.5 கி.மீ. தொலைவுக்கு மட்டும் சாலைவலம் நடத்துவதற்கு ஆனந்த் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது. இதற்கும் புதுச்சேரி போலீசார் அனுமதி அளிக்க மறுத்த நிலையில், பொதுக்கூட்டம் வேண்டுமென்றால் நடத்திக் கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு இரண்டு இடங்களை ஆனந்த் தேர்வு செய்து கொடுத்ததாக கூறப்படும் நிலையில், தனது முழுப் பயணத்தையும் விஜய் ரத்து செய்துள்ளார்.விஜய்யின் பொதுக்கூட்டமும் ரத்து செய்யப்பட்டதால் புதுச்சேரி தவெக தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
![]()





