செய்திகள்

நானே இப்போது பாமக தலைவர்: தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 10–

அன்புமணி பதவி காலம் மே மாதத்துடன் நிறைவடைந்து விட்டதால், நானே இப்போது பாமக தலைவராக உள்ளேன் என தேர்தல் ஆணையத்துக்கு மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி ராமதாஸை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தக் கடிதத்தில், ராமதாஸ் தானே கட்சியின் தலைவர் என்று உறுதிப்படுத்தியதாகவும், அன்புமணியின் செயல்பாடுகளால் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களைக் காரணம் காட்டி இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர், 2022 இல் பாமகவின் பொதுக்குழு கூட்டத்தில் அன்புமணி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். மேலும் 2026 வரை அவர் தலைவராக நீடிப்பதாக தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் இருப்பதாக அன்புமணி தரப்பு வாதிடுகிறது. இருப்பினும், ராமதாஸ் தரப்பு, கட்சியின் நிறுவனராக தனக்கு முழு அதிகாரம் உள்ளதாகவும், அன்புமணியை நீக்குவது கட்சி விதிகளுக்கு உட்பட்டது என்றும் கூறுகிறது.

நானே தலைவர்–ராமதாஸ்

இந்த மோதல் காரணமாக, இரு தரப்பினரும் தனித்தனியாக நிர்வாகிகளை நியமித்தும், நீக்கியும் வருகின்றனர். உதாரணமாக, அன்புமணி, ராமதாஸ் ஆதரவாளரான எம்எல்ஏ அருளை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவித்தார். ஆனால் ராமதாஸ் இதை ஏற்க மறுத்து, அருளை கொறடாவாக தொடர்ந்து நியமித்தார். இதேபோல், கடந்த 5-ம் தேதி ராமதாஸ் 21 பேர் கொண்ட புதிய நிர்வாகக் குழுவை அறிவித்து, அதில் அன்புமணியின் பெயரை நீக்கியுள்ளார்.

இந்த விவகாரத்தில், ராமதாஸ் மற்றும் அன்புமணி தரப்புகள் தேர்தல் ஆணையத்தை அணுகியுள்ளன. அன்புமணி, கட்சியின் விதிகளின்படி தாமே தலைவர் என்றும், தனது நியமனங்கள் மட்டுமே செல்லுபடியாகும். பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற செயற்குழு செல்லாது. செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என்றும் தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார்.

மறுபுறம், ராமதாஸ் தனது கடிதத்தில் கட்சியின் முழு அதிகாரமும் தன்னிடம் உள்ளதாகவும், அன்புமணியை நீக்குவது கட்சியின் மாண்பைப் பாதுகாப்பதற்காக என்றும் வலியுறுத்தியுள்ளார். அதன்படி, பாமக தலைவராக அன்புமணியின் பதவிக்காலம் மே 28 உடன் நிறைவு, பாமக சட்ட விதிகளின்படி, மே 29-ல், ராமதாஸ் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பிலிருந்து முறைப்படி கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *