செய்திகள்

த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் முன்ஜாமீன் மனு தாக்கல்

Makkal Kural Official

சென்னை, செப். 30–

கரூர் சம்பவம் தொடர்பாக போலீசாரின் கைது நடவடிக்கையை தடுக்க த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளனர்.

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த உயிரிழப்புகள் தொடர்பாக கரூர் டவுண் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். 5 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜ் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்திருந்த போலீசார் மாவட்ட செயலாளர் மதியழகனை நேற்று கைது செய்த நிலையில் இன்று மத்திய மாநகர நிர்வாகியான பவுன்ராஜை கைது செய்தனர்.

இதை தொடர்ந்து த.வெ.க. முக்கிய பிரமுகர்களான பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரையும் கைது செய்வதற்கு போலீசார் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி உள்ளனர். புதுச்சேரியை சேர்ந்த புஸ்சி ஆனந்த் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு தலைமறைவாகி விட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இதே போன்று நிர்மல் குமாரும் தலைமறைவாகி இருக்கிறார். இருவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

இந்நிலையில் முன்ஜாமின் கோரி த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், ஆர்.நிர்மல் குமார் ஆகியோர் ஐகோர்ட் மதுரை கிளையில் தனித்தனியாக மனு தாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், அரசியல் காரணங்களுக்காக கரூர் துயர சம்பவத்தில் த.வெ.க. நிர்வாகிகள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.

கூட்டத்தை கட்டுப்படுத்த தேவையான போலீசார் சம்பவ இடத்தில் இல்லை. கூட்டத்தை கட்டுப்படுத்தும் பணியில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஈடுபட்டனர். கரூரில் விஜய் பிரச்சார கூட்டத்தில் சமூக விரோதிகளால் நெரிசல் ஏற்பட்டது. நோயாளிகள் யாரும் இன்றி ஆம்புலன்ஸ் விஜய் பிரச்சார கூட்டத்திற்குள் வந்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மனு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *