செய்திகள்

த.வெ.க கொடி நிறம் தொடர்பான வழக்கு: விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவு

Makkal Kural Official

சென்னை, ஜூலை 17–

த.வெ.க கொடி நிறம் தொடர்பான மனுவுக்கு பதிலளிக்க த.வெ.க. தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ளார். வாகை மலருடன் இரண்டு யானைகள் இடம்பெற்று இருக்கும் வகையில் த.வெ.க கொடி வடிவமைக்கப்பட்டது. த.வெ.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட உடனே யானை சின்னத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும், இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை யானை சின்னத்தை பயன்படுத்த தவெக கட்சிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டுமென இடைக்கால மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், த.வெ.க. கொடியின் நிறம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை என்ற அமைப்பின் நிறுவன தலைவர் பச்சையப்பன் மனுவை தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், சிவப்பு, மஞ்சள்- சிவப்பு நிறம் எங்கள் சபைக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே பதிவு செய்யப்பட்ட சபையின் முதன்மை அதிகாரிகள் உள்ளிட்டோர் மட்டுமே பயன்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று ஐகோர்டில் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, வர்த்தக முத்திரை என்பது சரக்குகளுக்கு தானே பொருந்தும். எப்படி அரசியல் கட்சியின் கொடிக்கு பொருந்தும்? என கேள்வி எழுப்பினார். அதற்கு மனுதாரர் தரப்பில், வர்த்தக முத்திரை என்பது சரக்குக்கு மட்டும் இல்லாமல் சேவைக்கும் பொருந்தும். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளுக்கு வர்த்தக முத்திரை பொருந்தும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதையடுத்து, மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று த.வெ.க. மற்றும் அக்கட்சியின் தலைவர் விஜய்க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை தள்ளி வைத்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *