ஹுவாலின், செப். 24–
தைவான் நாட்டில் ஏற்பட்ட பலத்த சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியானார்கள். 129 பேரைக் காணவில்லை.
தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் கடந்த ஒரு சில நாள்களாகப் பெய்து வரும் கனமழை மற்றும் பலத்த சூறாவளி காரணமாக அந்த பகுதியில் இருந்த ஏரியின் கரைகள் உடைந்தது. ஏரி தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் தண்ணீரில் மூழ்கி 14 பேர் பலியானார்கள். மேலும் அந்த பகுதியில் வசித்து வந்த 129 பேரை காணவில்லை. அவர்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏரியிலிருந்த தண்ணீர் சுனாமி போல ஊருக்குள் நுழைந்ததாக, அந்தப் பகுதியில் இருக்கும் அஞ்சல் நிலையத்தின் இரண்டாவது மாடியில் இருந்ததால் உயிர் தப்பிய அஞ்சல் துறை ஊழியர் கூறியுள்ளார். வெள்ளம் வடிந்தபிறகு, வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, வாசலில் நிறுத்தப்பட்டிருந்த தனது கார், வீட்டின் வரவேற்பறைக்குள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
60 மில்லியன் டன் தண்ணீர் ஏரியில் இருந்ததாகவும் மீட்புப் பணியில், தைவான் நாட்டு பாதுகாப்புப் படை ஈடுபட்டுள்ளதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. வீடுகளில் வெள்ளம் சூழ்ந்ததால், சுமார் 8.700 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
![]()





