பீகார் தேர்தலில் ஜன்சுராஜ் கட்சிக்கு ஒரு இடம் கூட இல்லை
பாட்னா, நவ. 14–
பிரபல தேர்தல் ஆலோசகர் என்று பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு பீகார் சட்டசபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
பீகாரில் பா.ஜ.க. – காங்கிரஸ் கூட்டணிகளிடையே பலத்த போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் புது போட்டியாளராக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் களத்தில் இறங்கியது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 238 தொகுதிகளில் அக்கட்சி போட்டியிட்டது.
இந்தத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று களமிறங்கிய ஜன் சுராஜ் கட்சி ஓரிரு இடங்களில் வெல்லக்கூடும் என்று கருத்துக்கணிப்புகளும் தெரிவித்தன. ஆனால் இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஜன்சுராஜ் கட்சி ஒரு தொகுதியில் கூட முன்னிலையில் இல்லை. தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் படுதோல்வியை சந்தித்து மண்ணை கவ்வினார்.
நிதிஷ் குமாரின் கட்சி (ஐக்கிய ஜனதா தளம்) 25 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்றால், அரசியலில் இருந்து தான் விலகுவதாக பிரசாந்த் கிஷோர் பிரச்சாரம் ஒன்றில் கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் சுமார் 83 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் முன்னிலை வகித்து வருகிறது. இதன்மூலம் பிரசாந்த் கிஷோர் தான் கூறியதுபடியே அரசியல் பயணத்தில் இருந்து விலகுவாரா? அல்லது கட்சியை களைத்துவிட்டு மீண்டும் தேர்தல் கருத்துக்கணிப்புகளை மேற்கொள்வாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. எதுவாக இருந்தாலும் முழுமையான தேர்தல் முடிவுக்கு பின்னரே அவரின் நிலைமை தெரிய வரும்.
மாநிலம் முழுவதும் 3 ஆயிரம் கிலோமீட்டர் பேரணி சென்று பிரசாரத்தை செய்தார் பிரசாந்த் கிஷோர். செல்லும் இடங்களில் எல்லாம் நல்ல கூட்டமும் கூடியது.இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தார் அவர். ஆனால் இந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் ஜன் சுராஜ் கட்சி முன்னிலை பெறாதது க்கட்சியின் தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
![]()





