சென்னை, ஜன. 26–
‘தமிழ்நாட்டில் மிகச்சிறந்த மனித வளம் இருக்கிறது. நமது இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், கைவினைஞர்கள் என சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் ‘தேசத்திற்கே முதன்மை’ என்ற உறுதிமொழிக்கு தங்களை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும்’ என்று கவர்னர் ஆர்.என். ரவி அழைப்பு விடுத்தார்.
நமது வினைத் திட்பத்தைக் கட்டவிழ்த்துவிட்டு சுயசார்புடைய, வளர்ந்த பாரதத்தை 2047ஆம் ஆண்டிற்குள் நாம் உருவாக்குவோம் என்று வலியுறுத்தினார்.
மண்ணை வளப்படுத்தவும், ஆரோக்கியமான உணவை உற்பத்தி செய்யவும், அதிக மகசூலை நிலைநிறுத்தவும் பாரம்பரிய அறிவை நவீன தொழில்நுட்பத்துடன் கலந்து நம் விவசாயிகள் பயன்படுத்துகின்றனர். இந்த இயக்கம் டாக்டர் ஜி. நம்மாழ்வாரிடமிருந்து உத்வேகம் பெறுகிறது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும் தாய் பூமியைப் பாதுகாப்பதும் நமது கடமை என்பதை பிரதமர் வலியுறுத்தி வருகிறார்’ என்பதை கவர்னர் சுட்டிக்காட்டினார்.
இன்று நாட்டின் 77வது குடியரசு தினம். இதையொட்டி மக்களுக்கு வாழ்த்துக்களுடன் கவர்னர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை வருமாறு:–
நமது சுபான்சு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த முதல் இந்தியர் என்று ஆனபோது, விண்வெளித் துறையில் நாம் ஒரு புதிய வரலாற்றைப் படைத்தோம். இன்று இந்தத் துறையில் 300க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. நாம் ஒரு செழிப்பான விண்வெளிப் பொருளாதாரத்தை எதிர்நோக்கி இருக்கிறோம்.
பாதுகாப்புத் துறையில், இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புத் திறன்களின் தொழில்நுட்ப மேன்மையை ஆபரேஷன் சிந்தூர் நிரூபித்தது. பாகிஸ்தானின் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக, பாகிஸ்தானின் பயங்கரவாதக் கட்டமைப்புகளை பாரதம் அழித்தது. 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளைக் கொன்றது. பாகிஸ்தானின் பதிலடி கொடுக்கும் திறனை செயலிழக்கச் செய்தது. பாதுகாப்புத் துறைக்கான 1000க்கும் மேற்பட்ட புத்தொழில் அமைப்புகள் இன்று நம்மிடம் உள்ளன. நமது பாதுகாப்பு ஏற்றுமதியும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
பாரதத்தின் பாதுகாப்புப் பொருள்களின் உற்பத்தி, சாதனை அளவாக ரூ.1.54 லட்சம் கோடியை எட்டியுள்ளது. இவற்றின் ஏற்றுமதி ரூ. 23,622 கோடியாக உயர்ந்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாதுகாப்பு அமைப்பு முறைகள் கிட்டத்தட்ட 80 நாடுகளின் பாதுகாப்புத் தேவைகளுக்கு சேவை செய்கின்றன. 2029ஆம் ஆண்டுக்குள் ரூ.3 லட்சம் கோடி உற்பத்தி மற்றும் ரூ.50,000 கோடி ஏற்றுமதி இலக்குகளுடன் நம்பகமான மேம்பட்ட உள்நாட்டுப் பாதுகாப்புத் திறன்களுக்கான உலகளாவிய மையமாக பாரதம் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட ரோபாட்டிக்ஸ், குவாண்டம் கம்ப்யூட்டிங், நானோ தொழில்நுட்பம் போன்ற புதுயுகத் தொழில்நுட்பங்களின் களத்தில், சிறந்து விளங்கும் சில நாடுகளில் பாரதமும் ஒன்றாகும்.
முதல் முறையாக, மின்சார உற்பத்தியில் புதைபடிவ எரிபொருள் அல்லாத மூலங்கள், நிறுவப்பட்ட மொத்த மின் உற்பத்தியில் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளன. இது 2030ஆம் ஆண்டிற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்காகும்.
தமிழ்நாடு ரயில்வே
திட்டம்: ரூ.6626 கோடி
தற்போதைய ரயில்வே பட்ஜெட்டில் தமிழ்நாடு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு பெற்று, 80க்கும் மேற்பட்ட நிலையங்களை நவீனமயமாக்குதல், வந்தே பாரத் ரயில்கள் மூலம் பிராந்திய இணைப்பை மேம்படுத்துதல் ஆகியவற்றில் ஒரு முக்கிய பயனாளியாக உள்ளது. ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட தூத்துக்குடி விமான நிலைய முனையம், தென் மாவட்டங்களுக்கான இணைப்பை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் வடக்குப் பகுதியில் உள்ள சரக்குக் கப்பல் நிறுத்துமிடம்-3, சரக்கு கையாளுதலை விரிவுபடுத்தி சேவைகளை நெறிப்படுத்தியுள்ளது.
2025, டிசம்பர் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட ரூ.28 லட்சம் கோடி மதிப்புள்ள 21.6 பில்லியன் பரிவர்த்தனைகளை யுபிஐ செயல்படுத்தியுள்ளது.
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் பாரதத்தின் பாரா-தடகள வீரர்கள் 22 பதக்கங்களை வென்று வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையைப் படைத்தனர். இதுதவிர, நமது பார்வை மாற்றுத் திறனாளிகளின் பெண்கள் கிரிக்கெட் அணி பார்வை மாற்றுத் திறனாளிப் பெண்களுக்கான 20-20 உலகக் கோப்பையை முதன்முதலாக வென்றது.
கவிச்சக்கரவர்த்தி கம்பனின் பாரம்பரியத்தை நமது மக்கள் 2025ஆம் ஆண்டில், மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடினர். ராஜேந்திர சோழனின் ஆயிரமாவது ஆண்டு விழா வரலாற்றுச் சிறப்புமிக்க கங்கைகொண்ட சோழபுரத்தில் ஒரு பிரமாண்டமான விழாவாகக் கொண்டாடப்பட்டது. தமிழ்ப் பாரம்பரியத்தின் மீது மிகுந்த அபிமானம் கொண்டிருக்கும் பிரதமர் இதில் பங்கேற்று, ராஜ ராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் அற்புதமான சிலைகள் நிறுவப்படும் என்று அறிவித்தார். காலத்தால் அழியாத பாரதத்தின் பாரம்பரியப் பெருமையை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.
பிரதமர் மோடியால் உருவாக்கப்பட்டு வழிநடத்தப்படும் வருடாந்திர காசி-தமிழ்ச் சங்கமம் மூலம் தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான ஆழமான, பழமையான தொடர்பை நாம் கொண்டாடினோம். 2025ஆம் ஆண்டில், இந்த விழாவின் நான்காம் பதிப்பு “தமிழ்க் கார்காலம்” என்ற கருப்பொருளின் கீழ் பெருத்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.
1908ஆம் ஆண்டு தூத்துக்குடி பவள ஆலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் முதற்கொண்டு, இன்றைய இளைஞர்கள் வரை பாரதத்தின் மீதான அசைக்க முடியாத அன்பையும் பக்தியையும், தைரியத்தையும் வந்தே மாதரம் பாடல் தொடர்ச்சியாக தூண்டிவிட்டு வருகிறது. வந்தே மாதரம் பாடல் தமிழக இளைஞர்களிடையே ஆழமாக எதிரொலித்து வருகிறது. இந்த கீதத்தின் உணர்வு, முழுமையான வளர்ச்சி கண்ட பாரதத்தை – விக்ஸித் பாரத் 2047ஐ உருவாக்குவதில் நம்மை வழிநடத்தி உற்சாகப்படுத்தட்டும்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.
![]()





