சென்னை, ஜன. 26–
77-வது குடியரசு தினத்தை முன்னிட்டு பெரம்பூர் ரயில்வே மைதானத்தில் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
ஆர்.பி.எப். ஐ.ஜி கே. அருள் ஜோதி முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினர் நவீன் குலாட்டி, கூடுதல் பொதுமேலாளர் விபின் குமார், தெற்கு ரயில்வேயின் முதன்மைத் துறைத் தலைவர்கள், சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங், தெற்கு ரயில்வே பெண்கள் தலைமையக அமைப்பின் தலைவர் சோனியா சிங், துணைத் தலைவர் சாரு குப்தா, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், தொழிற்சங்கங்கள் மற்றும் சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் ரெயில்வே காவலர்களின் அணிவகுப்புக்குப் பின்னர், ஆர்.பி.எப். வழங்கிய பண்பாட்டு நிகழ்ச்சிகள், தெற்கு ரயில்வே நாய் படையின் கண்கவர் நாய் நிகழ்ச்சி, ரயில்வே பள்ளிகள் மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான ஆஸ்ரயா பள்ளி உட்பட பல்வேறு துறைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.
இதே போல் எக்மோரில் உள்ள ரயில்வே கட்டுமான அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி சுஷில் குமார் மௌர்யா, சென்னை பிரிவு ரயில்வே மேலாளர் ஷைலேந்திர சிங் மற்றும் பெரம்பூர் லோகோ வொர்க்ஸின் முதன்மை பணிமனை மேலாளர் டி. நீலகண்டன் ஆகியோர் சென்னையில் உள்ள தங்களது துறை அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றினர்.
மேலும், சென்னை ரயில்வே கோரிக்கைத் தீர்ப்பாயத்தின் கூடுதல் பதிவாளர் ஜயந்தி மற்றும் சென்னை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா தேவேந்திர யாதவ் ஆகியோரும் தங்களது அலுவலகங்களில் தேசியக் கொடியை ஏற்றினர்.
![]()





