சென்னை, ஜூலை 21–
தி.மு.க. அரசின் திறமையற்ற நிர்வாகத்தால் தமிழ்நாட்டில் கிட்னி விற்பனை தலைவிரித்து ஆடுகிறது என ஓ. பன்னீர்செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
போதைப் பொருள் விற்பனை, போலி மருந்து விற்பனை, காலாவதியான மாத்திரைகள் விற்பனை, கள்ளச்சாராய விற்பனை என்ற வரிசையில் தற்போது சட்ட விரோத கிட்னி விற்பனை தமிழ்நாட்டில் கொடிகட்டி பறக்கிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்த பெண்களை பெரிய மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்று கிட்னி விற்பனை செய்யப்படுவதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவியது.
இதனையடுத்து நடந்த விசாரணையில், திருச்சி, பெரம்பலூர் மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ள பெரிய மருத்துவமனைகளுக்கு கிட்னி விற்பனை செய்யப்பட்டதுள்ளதும், கிட்னி அளித்தவர்களின் முகவரி போலியானது என்பதும், நாமக்கல் மாவட்டத்திற்குட்பட்ட வசந்த நகர், காவிரி, ஆவத்திபாளையம், ஆவாரங்காடு போன்ற இடங்களிலும் கிட்னி இடைத்தரகர்கள் செயல்படுகிறார்கள் என்பதும், தெரியவந்துள்ளது.
சட்ட விரோத கிட்னி விற்பனை நடைபெறுவதற்கு முக்கிய காரணம் தி.மு.க. அரசின் மோசமான செயல்பாடு தான்.
இந்த சட்ட விதிகளின்படி சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் மாநில அரசுக்கு உண்டு. ஆனால், இதனைக் கண்காணிக்க தி.மு.க. அரசு தவறிவிட்டது.
முதலமைச்சர் இதில் தனிக் கவனம் செலுத்தி, சட்ட விரோதமாக கிட்னி விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், சட்ட விரோதமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
![]()





