திருவள்ளூர், நவ. 25–
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சி சுந்தர சோழபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 333.26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 377 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 137.38 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 211 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 1,12,294 பயனாளிகளுக்கு 1000.34 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் கூறியதாவது:
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெறுகின்ற இந்த பிரம்மாண்டமான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றேன், பெருமையடைகின்றேன். பல்வேறு மாவட்டங்களுக்கு செல்கின்றேன். வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாத வகையில், நம்முடைய திருவள்ளுர் மாவட்டத்தில் இன்றைக்கு மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான பயனாளிகளுக்கு சுமார் 1,500 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்க சொல்லியிருக்கிறார். அதில், சுமார் 325 கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற பணிகளை இன்றைக்கு திறந்து வைத்திருக்கின்றோம், 137 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பணிகளை இன்றைக்கு தொடங்கி வைத்திருக்கின்றோம். அனைத்து தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்காகவும் நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. உங்களுக்காக இன்னும் அதிகமாக உழைப்பதற்காக நம்முடைய முதலமைச்சரும், நம்முடைய அரசும் தயாராக இருக்கின்றது. ஆகவே, திராவிட மாடல் அரசு தொடர நீங்கள் அத்தனைபேரும் நம்முடைய அரசிற்கு துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், நாடளுமன்ற உறுப்பினர் ச.சசிகாந்த் செந்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், வி.ஜி.இராஜேந்திரன், எஸ்.சந்திரன், டி.ஜே.கோவிந்தராஜன், க.கணபதி, துரை சந்திரசேகர், மாவட்ட ஆட்சித் தலைவர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, ஆவடி மாநகராட்சி ஆணையர் சரண்யா, மாவட்ட வருவாய் அலுவலர் சு.சுரேஷ், சார் ஆட்சியர் ரவிக்குமார், திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
![]()





