செய்திகள் முழு தகவல்

திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூண் அல்ல

Makkal Kural Official

மதுரை, டிச. 15:

‘திருப்பரங்குன்றம் மலையில் இருப்பது தீபத் தூணல்ல, சமணர் காலத்துத் தூண்’ என்று கோர்ட்டில் கோவில் நிர்வாகம் வாதாடியது.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், கார்த்திகை தீபம் ஏற்ற மதுரை மாவட்டம், எழுமலையை சேர்ந்த ராம ரவிகுமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். இந்த உத்தரவை நிறைவேற்றாததால், ராம ரவிக்குமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தீபத்துாணில் தீபம் ஏற்றவில்லை. பிற மனுதாரர்கள் உட்பட, 10 பேரை மனுதாரர் அழைத்துச் செல்லலாம். அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சி.ஐ.எஸ்.எப்., வீரர்களை அனுப்ப உயர்நீதிமன்ற சி.ஐ.எஸ்.எப்., கமாண்டன்டிற்கு உத்தரவிடுகிறேன்’ என்றார். நீதிபதி சுவாமிநாதன் உத்தரவை எதிர்த்து, ஐகோர்ட் மதுரைக்கிளையில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் 2வது நாளாக ஐகோர்ட் மதுரைக்கிளை இரு நீதிபதிகள் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் நிர்வாகம் சார்பில் பல்வேறு வாதங்கள் முன் வைக்கப்பட்டன.

கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், “கோவில் நிர்வாகம் மற்றும் வழிபாட்டு முறைகளில் முடிவெடுக்கும் முழு அதிகாரம் தேவஸ்தானத்திற்கே உள்ளது. இதில் தனிநபர்களின் விருப்பங்களுக்கு இடமில்லை. திருப்பதி தேவஸ்தான வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி, ஆகம விதிகளை மீறிப் புதிய நடைமுறைகளை உருவாக்க முடியாது.

கடந்த 100 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது; இதுவே ஆகமப்படி சரியானது. 2021-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, கோவில் நிர்வாகத்தில் உயர்நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது. இத்தகைய பாரம்பரிய உரிமைகள் குறித்தப் புகார்களுக்கு மனுதாரர் உரிமையியல் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும்.

தனி நீதிபதி தனது உத்தரவின் போது, கோவிலின் முடிவுகளை எடுக்கும் ‘அறங்காவலர் குழுவை’ வழக்கில் சேர்க்கவில்லை. இது சட்டப்படி தவறானது” என்று வாதங்களை முன்வைத்தனர்.

புதிய திருப்பம்

தமிழக அரசு மற்றும் தொல்லியல் துறை சார்பில் வைக்கப்பட்டு வாதங்கள்:

அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் வழக்கிற்குப் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. மலை உச்சியில் உள்ள தூண் ‘தீபத்தூண்’ அல்ல. மாநில தொல்லியல் துறையின் கள ஆய்வின்படி, அது ஒரு ‘நில அளவைக்கல்’ என்பது உறுதியாகியுள்ளது. 1920-ஆம் ஆண்டு ஆவணங்களில் கூட அது தீபத்தூண் எனக் குறிப்பிடப்படவில்லை. மலை உச்சியில் தர்கா அமைந்துள்ள நிலையில், அதன் மிக அருகில் தீபம் ஏற்றினால் ஏற்படும் அதீத வெப்பம் மற்றும் பாதுகாப்புச் சிக்கல்கள் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கக்கூடும் என அரசு கவலை தெரிவித்தது.

1981-ஆம் ஆண்டு தொல்லியல் துறை வெளியிட்ட நூலில், மலையடிவாரத்தில் உள்ள நாயக்கர் காலத் தூணே உண்மையான தீபத்தூண் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை அரசு தரப்பு ஆதாரமாகச் சமர்ப்பித்தது. விசாரணையின் போது, மதுரையைச் சுற்றியுள்ள சமணர் மலை, பசுமலை மற்றும் நாகமலைகளில் உள்ள தூண்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. வரலாற்று ஆய்வாளர் மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘சமணமும் தமிழும்’ நூலை மேற்கோள் காட்டி, இவை சமணர்கள் இரவில் விளக்கேற்றப் பயன்படுத்திய தூண்களாக இருக்கலாம் என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது.

“திருப்பரங்குன்றம் கோவிலில் தற்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பாக நியமனம் செய்யப்பட்ட அறங்காவலர் குழு செயல்பாட்டில் இருக்கிறதா? அவர்கள் பணியில் உள்ளனரா?” மேலும், “இந்த விவகாரம் 1920-ஆம் ஆண்டில் இருந்தே தொடர்வதால், இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு தேவை. தீபம் அனைவருக்கும் தெரியும் வகையில் ஏற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏன் பரிசீலிக்கக் கூடாது? மதம் சார்ந்த விஷயங்கள் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தர்கா தரப்பு வாதம்

தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் தர்கா தரப்பு வாதங்கள் முழுமையாகக் கேட்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டைத் தர்கா நிர்வாகம் முன்வைத்துள்ளது. கோவில் மற்றும் அரசு தரப்பு வாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், அடுத்தகட்டமாக தர்கா நிர்வாகம் மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்கள் கேட்கப்பட உள்ளன. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகே, மலை உச்சியில் தீபம் ஏற்றுவது குறித்த இறுதி உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *