திருச்சி, ஜூலை 27–
திருச்சியில் பிரதமர் மோடியை, அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து, 3 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவண செய்வதாக உறுதி அளித்தார்.
தமிழகத்தில் வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அண்ணா தி.மு.க. தலைமையில் பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்து கூட்டணியை உறுதி செய்தார்.
இந்த நிலையில் 2 நாள் சுற்றுப்பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை சந்திப்பதற்காக சேலத்தில் இருந்து எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு திருச்சிக்கு வந்தார். அங்கு தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவர், இரவு 9.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தார்.
தூத்துக்குடியில் விழா முடிந்த பிறகு, விமானம் மூலம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு நேற்று இரவு 10.15 மணிக்கு பிரதமா் மோடி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் பிரதமருக்கு அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். சில நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. அப்போது பிரதமர் மோடியிடம் 3 கோரிக்கைகள் அடங்கிய மனுவை எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
அதில், “விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். கோதாவரி – காவிரி இணைப்பு திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்து உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் பிரத்யேக ராணுவ வழித்தடம் ஒன்றை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளுடன் எடப்பாடி பழனிசாமி மனு அளித்தார்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட பிரதமர் மோடி பரிசீலித்து ஆவன செய்வதாக உறுதி அளித்தார். இந்த சந்திப்பின்போது அண்ணா தி.மு.க. துணை பொதுச் செயலாளர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி மற்றும் முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.
முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேயர் அன்பழகன், மாவட்ட கலெக்டர் சரவணன், போலீஸ் கமிஷனர் காமினி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், துரை வைகோ எம்.பி., வீர முத்தரையர் முன்னேற்ற சங்க தலைவர் கே.கே.செல்வகுமார் மற்றும் பா.ஜ.க. மண்டல மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் ஆகியோரும் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார்.
அதே நேரத்தில், தமிழகம் வந்துள்ள பிரதமரை சந்திக்க ஓ.பன்னீர்செல்வத்துக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை
![]()





