திருச்சி, செப். 3–
திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திரக் கோளாறு கண்டறியப்பட்டதால் அந்த விமானம் ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டதால் 150-க்கும் மேற்பட்டோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருச்சி விமான நிலையத்தில் சார்ஜாவுக்கு புதன்கிழமை காலை 4.40 மணிக்கு ஏர் இந்தியா விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. விமானம் ஓடுபாதைக்குக் கொண்டுவரப்பட்டபோது திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டிருப்பதை விமானி கண்டறிந்தார். இதையடுத்து ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது.
உடனடியாக இயந்திரக் கோளாறை சரி செய்யும் பணியில் வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து வருகின்றனர். விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை விமானி உடனடியாகக் கண்டறிந்து நடவடிக்கை எடுத்ததால் 150-க்கும் மேற்பட்டோர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர். விமானத்தில் 150-க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளேயே அமர வைக்கப்பட்டுள்ளதால் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்த சம்பவத்தால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு நிலவியது.
![]()





