செய்திகள்

தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை

Makkal Kural Official

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை, ஜூலை 25–

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழ்நாட்டிற்கு நாளை ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உள்பட 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுகிறது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. வடக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு வங்கக்கடலில் மேற்கு வங்கம் வங்கதேச கடற்கரை பகுதிகளில் மையம் கொண்டுள்ளது. அதன்படி, மோங்லாவிற்கு தெற்கில் 130 கிமீ, சாகர் தீவுக்கு 150 கிமீ, கொல்கத்தாவுக்கு 170 கிமீ தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது.

இது மெதுவாக, மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் வாக்கில் மேற்குவங்க வங்கதேச கடல் பகுதியில் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இது அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு வங்கம், அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா, ஜார்கண்ட் வழியே நகர கூடும் என கூறப்படுகிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் நாளை ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இன்று முதல் 3 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை அடுத்து 9 துறைமுகங்களில் புயல் கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *