சென்னை, ஜூலை 2–
முதலமைச்சரால் தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18–ம் நாளினை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டது. இவ்வறிவிப்பிற்கு இணங்க 2022–ம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு நாள் விழா தொடர்பில் அனைத்து மாவட்டங்களிலும், 6–ம் வகுப்பு முதல் 12–ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் மூன்று பரிசுகள் மாவட்ட அளவில் வழங்கப்பெறுவதுடன் முதல் பரிசு பெறும் மாணவர் மாநிலப் போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினைப் பெறுவர்.
மாநிலப் போட்டியில் கலந்து கொண்டு முதல் மூன்று இடம் வகிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18–ம் நாளன்று நடைபெறும் தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெற்று வருகின்றனர்.
சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்டப் போட்டி 4–ந் தேதி அன்று சென்னை சிந்தாதிரிப்பேட்டை, கல்யாணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறவுள்ளன.
இப்போட்டிகளில் வெற்றிபெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ. 10 ஆயிரம், – இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம்-, மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம்- மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கிச் சிறப்பிக்கப்பெறுவர்.
போட்டிகளுக்கான தலைப்புகள்:
கட்டுரை போட்டிக்கு – ஆட்சிமொழி வரலாற்றில் கீ. இராமலிங்கம், பன்மொழிப் புலவர் கா. அப்பாதுரையாரின் தமிழ் ஆட்சிச் சொல் பணி.
பேச்சு போட்டிக்கான தலைப்புகள்: கடமை, கண்ணியம், கட்டுப்பாடு,அன்னைத் தமிழே ஆட்சிமொழி,தொன்றுதொட்டு தமிழ்நாடு எனும் பெயர்,
அறிஞர் அண்ணா கண்ட தமிழ்நாடு, ஆட்சிமொழி விளக்கம், தமிழ்நாடு எனப் பெயர் சூட்டிய நிகழ்வு,
ஆட்சிமொழி – சங்க காலம் தொட்டு, இக்காலத்தில் ஆட்சிமொழி.
![]()





