சென்னை, ஜூலை.12-
மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முன்னணியில் இருக்கும் தமிழகத்தை தண்டிக்கும் வகையில் தொகுதி மறுசீரமைப்பு செய்வதில் அநியாயம் செய்யப்படுகிறது. அதனால் தமிழ்நாடு டெல்லிக்கு அடிபணியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மக்கள்தொகை தினமான நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
உலக மக்கள்தொகை நாளில், மத்திய அரசுக்கு ஒரு நினைவூட்டல். தமிழ்நாடு மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் முன்னணி வகிக்கிறது, பெண்களின் மாண்பைக் காத்து அவர்களுக்கான அதிகாரத்தை வழங்குகிறது. அனைவருக்கும் மருத்துவம் மற்றும் கல்வியை உறுதிசெய்கிறது. நீடித்து நிலைக்கத்தக்க வளர்ச்சியை முன்னெடுக்கிறது.
ஆனால், பதிலுக்கு நமக்குக் கிடைப்பது என்ன? குறைவான நாடாளுமன்ற தொகுதிகள். குறைவான நிதி ஒதுக்கீடு. நாடாளுமன்றத்தில் இருந்து ஒதுக்கப்படும் நமது குரல். ஏனென்றால், தமிழ்நாடு சரியானதைச் செய்தது. அதுதான் டெல்லியை அச்சுறுத்துகிறது.
இதைவிட மோசம் என்னவென்றால், எடப்பாடி பழனிசாமியும், அவரது கட்சியும் தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார்கள். நாம் எட்டிய வளர்ச்சிக்காக நம்மைத் தண்டிக்கும் அநியாயமான தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறார்கள்.
தெளிவாகச் சொல்கிறேன்: தமிழ்நாடு உங்களுக்கு அடிபணியாது. நாங்கள் ஒருமித்து எழுவோம். இது டெல்லி அணிக்கு எதிரான ஓரணி. நமது மண், மொழி, மானம் காக்க இணைவீர். ஓரணியில் தமிழ்நாடு.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
![]()





