சென்னை, நவ. 2–
தமிழகம் முழுவதும் இன்று கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது.
கல்லறை தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் தேதி அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி, கல்லறைத் தோட்டங்களில் உள்ள முன்னோர்களின் கல்லறைகளை சுத்தப்படுத்தி, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும், ஜெப வழிபாடு, சிறப்பு ஆராதனையும் நடைபெறும்.
அந்த வகையில், கத்தோலிக்க திருச்சபையினர் சார்பில் தாம்பரத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் 100க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் உயிரிழந்தவர்களின் கல்லறைகளுக்கு சென்று மாலை அணிவித்தும், மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் மரியாதை செலுத்தினர்.
விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோட்டில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்துவ மக்கள் திரண்டு, முன்னோர்களின் நினைவிடங்களில் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் பிரார்த்தனை செய்தனர். அவர்கள் ஆன்மா சாந்தி அடையும் வகையில் நினைவு கூர்ந்தனர். இதனால் கல்லறைகள் பூக்களால், மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன.கிறிஸ்துவ பாதிரியார்கள் பிரார்த்தனை மேற்கொண்டனர். ஏராளமான கிறிஸ்துவ மக்கள் இதில் கலந்து கொண்டனர்.
![]()





