சென்னை, நவம்பர் 29:
தமிழகத்தின் தென் மாவட்டங்களை வேகமாக நெருங்கி வரும் ‘டிட்வா’ புயல் நாளை அதிகாலை அல்லது மதியம் கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகமுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) இன்று வெளியிட்ட முக்கிய அறிவிப்பில் தெரிவித்துள்ளது. புயலின் தீவிரம் காரணமாக தென் தமிழகம் முழுவதிலும் கனமழை தாழ்நிலப் பகுதிகளில் நீர்மட்ட உயர்வு கடலோர பகுதிகளில் அலைச்சலின் அதிகரிப்பு போன்ற தீவிர வானிலை மாற்றங்கள் பதிவாகின்றன.
தற்போது ‘டிட்வா’ குமரி கடல்பகுதியை கடந்தபடி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு மிக அருகில் நகர்ந்து வருகிறது. மணிக்கு 85–95 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கத்தால் பல இடங்களில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுதல் சாலைகளில் தண்ணீர் தேக்கம் போக்குவரத்து தடைகள் போன்ற பிரச்சனைகள் உருவாகியுள்ளன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாமென வானிலை மையம் மீண்டும் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
புயலின் தாக்கம் தீவிரமாக இருக்கும் பகுதிகளில் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. NDRF மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை படைகள் அதிக ஆபத்துள்ள பகுதிகளில் தயார் நிலையில் உள்ளன. தேவையானவற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்கவும் மின்சார மற்றும் தொலைத்தொடர்பு சேவைகளை விரைவில் சீரமைக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
நாளை கரையை கடக்கும் போது, குறுகிய காலத்தில் மழை அளவு மிக அதிகமாக இருக்கும் என்பதால் பொது மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் வெள்ளப்பெருக்கு பகுதிகளுக்கு செல்லக்கூடாது, அரசு வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்க வேண்டும் என அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
‘டிட்வா’ புயல் தென் தமிழகத்தை கடுமையாகப் பாதிக்கக்கூடிய நிலையில் மீட்புப் படைகள் முழு தீவிரத்துடன் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
![]()





