புதுடெல்லி, டிச. 4
இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கலை நோக்கி முன்னேறி வருகிறது. இதன்மூலம் நாட்டின் பாதுகாப்பு மேலும் வலுப்பெற்றுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:–
இந்திய கடற்படை வீரர்கள் அனைவருக்கும் இந்த நாளில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நம் கடற்படை வீரர்கள் அசாதாரண தைரியம், உறுதி ஆகியவற்றின் அடையாளமாக திகழ்கின்றனர். நாட்டின் கடலோரங்களையும், கடல் வர்த்தக நலன்களையும் திறம்பட பாதுகாத்து வருகின்றனர்.
சமீப ஆண்டுகளில், இந்திய கடற்படை தன்னிறைவு மற்றும் நவீனமயமாக்கல் ஆகிய இரண்டையும் நோக்கி முன்னேறி வருகிறது. இது நம் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு தீபாவளியை ஐஎன்எஸ் விக்ராந்த் கப்பலில் கடற்படை வீரர்களுடன் கொண்டாடிய தருணத்தை மறக்க முடியாது. இந்திய கடற்படையின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைய என வாழ்த்துகின்றேன், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
![]()





