தஞ்சாவூர், ஜூலை 8–
தஞ்சாவூர் அருகே சரக்கு வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சென்னையைச் சேர்ந்த 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் உதாரமங்கலம் அருகே தஞ்சாவூர் – விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலையில், நாற்றுகளை ஏற்றி கொண்டு சரக்கு வாகனம் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது சென்னையிலிருந்து தஞ்சைக்கு சுற்றுலா வந்த கார் எதிர்பாராத விதமாக மோதியது. இந்த கோர விபத்தில் காரில் பயணித்த விஜயா என்ற பெண் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மேலும் படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சென்னையை சேர்ந்த குமார் (வயது 52) அவரது மனைவி துர்கா (வயது 32), நிவேனி சூர்யா (வயது 3) ஆகிய மூன்று பேரும் செல்லும் வழியில் பலியாகினர்.
இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மோனிஷா, ஸ்டாலின், வேன் டிரைவர் விக்னேஷ் ஆகிய மூன்று பேரும் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மோனிஷா, ஸ்டாலின் ஆகியோர் விபத்தில் உயிரிழந்த குமாரின் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





