சென்னை, செப். 9–
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் நகை வாங்கும் இல்லத்தரசிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. சமீப காலமாக ஆபரணத் தங்கத்தின் விலை உச்சத்தை நோக்கி சென்று வருகிறது. தொடர்ந்து உயருவதும், பின்னர் ஏதோ ஒரு நாளில் மெல்ல குறைவதுமாக தங்கத்தின் விலை இருந்து வந்தது. கடந்த 6–ந்தேதி ஒரு சவரன் ரூ.80 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சம் தொட்டது. மறுநாள் ஞாயிறு என்பதால் மாற்றமின்றி விற்பனையானது. நேற்று தங்கம் விலை சற்று குறைந்து ஒரு சவரன் ரூ.79,760 என இருந்தது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மேலும் உயர்ந்து மீண்டும் வரலாறு காணாத புதிய உச்சத்தை தொட்டது. 22 காரட் தங்கம் இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து, ரூ.81,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.90 உயர்ந்து, ரூ.10,150-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், நகை வாடிக்கையாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரூ.1 லட்சம் வரை உயரும்
2019-ம் ஆண்டில் ஒரு சவரன் ரூ.25 ஆயிரம் என இருந்த தங்கம் விலை, 2020-ம் ஆண்டில் ரூ.30 ஆயிரமாகவும், 2021-ம் ஆண்டில் ரூ.35 ஆயிரமாகவும், 2022-ம் ஆண்டில் ரூ.40 ஆயிரமாகவும், 2023-ம் ஆண்டில் ரூ.45 ஆயிரமாகவும், 2024-ம் ஆண்டில் ரூ.50 ஆயிரமாகவும் அதிகரித்தது. இப்போதைய சூழலில் தங்கத்தின் விலை ஏறுமுகத்தில் இருந்தால் இந்த ஆண்டு (2025) இறுதிக்குள் ஒரு சவரன் விலை ரூ.1 லட்சத்தை எட்டும் என்று வர்த்தகர்களும், பொருளாதார ஆலோசகர்களும் தெரிவித்து இருக்கின்றனர்.
அந்த வகையில் ஒரே ஆண்டில் தங்கத்தின் விலை கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.140 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1 லட்சத்து 40 ஆயிரமாகவும் உள்ளது.
![]()





