செய்திகள்

தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது

Makkal Kural Official

அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஜூலை.31-

‘தகவல் தொழில்நுட்பத்தில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக திகழ்கிறது’ என அறிவுசார் சொத்துரிமை மாநாட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் சார்பில் அறிவுசார் சொத்துரிமை முதலாவது மாநாடு நடந்தது.

மாநாட்டுக்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

முதன்மை செயலாளர் பிரஜேந்திர நவ்நித் வரவேற்றார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

தமிழகத்தில் கருணாநிதி தலைமையிலான ஆட்சியின்போது தான் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டன. இன்று அது அபார வளர்ச்சி அடைந்துள்ளன. இதன்மூலம் லட்சக்கணக்கான தமிழக இளைஞர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மென்பொருள் ஏற்றுமதியில் இந்திய அளவில் தமிழகம் 3-வது இடத்தில் இருக்கிறது. புதிய தொழில்நுட்பங்களை தி.மு.க. அரசு எப்போதும் வரவேற்கிறது. தகவல் தொழில்நுட்பத்தில் முன்னணி மாநிலமாக தமிழகம் விளங்குகிறது.

மதுரை, கோவை போன்ற நகரங்களில் முக்கிய ஐ.டி. நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. இதனால் 2-ம் கட்ட நகரங்களில் ஐ.டி. தொழில் வேகமாக விரிவடைந்து வருகின்றன.

தமிழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் புதிய ஆராய்ச்சிகளை கண்டுபிடித்து அதை வெளிப்படுத்துவதோடு மட்டு மல்லாமல் அதன்மூலம் புதிய தயாரிப்புகளையும், புத்தொழில் நிறுவனங்களையும் உருவாக்குவது பற்றி சிந்திக்க வேண்டும்.

தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு முதலீட்டாளர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. தொழில் முதலீடு செய்வதை எளிதாக்கும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக பல அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம் தமிழக மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத்துறையில் சாதித்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மாநாட்டில் புத்தொழில் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ரூ.53 லட்சம் நிதி வழங்கப்பட்டது. கல்வி ஆராய்ச்சியாளர்களின் காப்புரிமை பெற்ற கண்டுபிடிப்புகளை தொழில் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்வதற்கான ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன.

தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிகளை வழங்குவதற்காக 6 முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது.

மாநாட்டு அரங்கில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டு ஆராய்ச்சியாளர்களுடன் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடினார்.

மாநாட்டில் மாநில திட்டக்குழு துணை தலைவர் ஜெயரஞ்சன், தேசிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் தலைவர் அமித்ரஸ்தோகி, சென்னை ஐ.ஐ.டி. ஆராய்ச்சி குழு தலைமை செயல் அதிகாரி நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *