100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிப்பு
புதுடெல்லி, நவ. 7–
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக டெல்லியில் இருந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் 100-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
புதுடெல்லி சர்வதேச விமான நிலையத்தின் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக 100க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் நாளொன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விமானங்களின் வருகைகள் மற்றும் புறப்பாடுகளை கையாண்டு வருகிறது. இந்த நிலையில், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மையத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக டெல்லி விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது. விமானத் திட்டங்களை வழங்கும் ஆட்டோ டிராக் சிஸ்டத்திற்கான (AMS) தகவல்களை வழங்கும் தானியங்கி செய்தி மாறுதல் அமைப்பில் (AMSS), சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில்,”விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு (ஏடிசி – ATC) அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதை விரைவில் தீர்க்க விமான நிலைய நிர்வாகம் உட்பட அனைத்து தரப்பினரும் தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. விமானப் பயணிகள் அந்தந்த விமான நிறுவனங்களுடன் தொடர்பில் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்திற்கு வருந்துகிறோம்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()





