செய்திகள்

டெல்லி கதீட்ரல் தேவாலயத்தில் பிரதமர் மோடி பிரார்த்தனை

Makkal Kural Official

புதுடெல்லி, டிச. 25–

டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் இன்று காலை நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தேவாலயங்கள் அனைத்தும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அங்கு மாட்டு கொட்டகையில், கிறிஸ்து பிறந்ததை நினைவு கூரும் வகையில் குடில் அலங்காரங்கள், கிறிஸ்துமஸ் மரம் ஆகியவையும் வைக்கப்பட்டிருந்தன. இதில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்று ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

வீடுகளிலும் ஸ்டார் தொங்கவிட்டு குடில் அலங்காரம் மற்றும் கிறிஸ்துமஸ் மரம் வைத்து கிறிஸ்தவ மக்கள் பண்டிகையை கொண்டாடினர். அரசியல் தலைவர்கள் பலரும் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிரதமர் மோடி இன்று காலை டெல்லியில் உள்ள கதீட்ரல் தேவாலயத்திற்கு சென்று பிரார்த்தனை செய்தார். அங்கு நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக் கூட்டத்தில் மக்களுடன் கலந்து கொண்டார். பிரதமர் மோடி வருகையையொட்டி அவருக்கான பிரார்த்தனை நடைபெற்றது. அதன் பிறகு பாதிரியார்களிடம் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமசின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *