புதுடெல்லி, டிச. 30:
டெல்லியில் இன்று அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள நிலையில், 118 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கடந்த சில நாட்களாக அடர் பனிமூட்டம் மற்றும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக டெல்லி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லி மற்றும் என்சிஆர் பகுதிகளில் இன்று பிற்பகல் வரை அடர் பனிமூட்டத்துக்கான சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதன் காரணமாக, டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படும் 60 விமானங்களும், வருகை தரவிருந்த 58 விமானங்களும் ரத்து செய்யப்பட்டிருப்பதாக ஏர் இந்தியா, இண்டிகோ உள்ளிட்ட பல்வேறு விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் 16 விமானங்கள் மோசமான வானிலை காரணமாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
வானிலை சற்று சீரான பிறகு படிப்படியாக விமான சேவைகள் இயக்கப்படும் என டெல்லி விமான நிலையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி மட்டுமின்றி அரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ரெயில்களும் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன.
![]()




