டெக்சாஸ், ஜூலை 7–
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 28 குழந்தைகள் உள்பட 80 பேர் பலியாகி உள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் தென்-மத்திய பிராந்தியத்தில் உள்ள கெர் கவுண்டியை புரட்டிப்போட்ட கனமழை மற்றும் வெள்ளத்தால் இதுவரை 28 குழந்தைகள் உட்பட 80 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
மீட்புப் பணிகள் தீவிரம்
கெர் கவுண்டியில் பெய்த கனமழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல மக்கள் தங்களின் உடைமைகளை இழந்து சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்.30 சென்டிமீட்டர் அளவுக்குப் பெய்த கனமழை காரணமாக, குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் சுமார் 26 அடி உயர்ந்ததால், பல வாகனங்கள் மற்றும் வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. தற்போது, ஹெலிகாப்டர் மூலம் மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
டெக்சாஸ் மாநிலத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக கெர் கவுண்டியில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. வாகனங்கள் கவிழ்ந்து, பல கட்டிடங்களும் சேதமடைந்தன. எங்கும் சேறும் சகதியுமாக இருப்பதால், மீட்புக் குழுவினர் மிகுந்த சிரமத்திற்கிடையே தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![]()





