செய்திகள்

டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு சைக்கிள் பேரணி

Makkal Kural Official

சென்னை, டிச. 22:

டி.ஜி. வைஷ்ணவா கல்லூரி, போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை வெற்றிகரமாக நடத்தியது. இந்த நிகழ்ச்சி, கல்லூரியின் போதைப் பொருள் ஒழிப்புமன்றம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை இணைந்து, பெருநகரச் சென்னைக் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டது. போதைப் பொருட்களின் தீமைகள் மற்றும் போக்குவரத்து ஒழுக்கத்தின் அவசியம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி, சென்னை அரும்பாக்கத்தில் உள்ள டி.ஜி. வைணவக் கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கியது. 250க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் இதில் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

“போதையைஒழிப்போம்; வாழ்க்கைப்பாதையை அமைப்போம்” “விபத்தில்லா சமூகம்” போன்ற முழக்கங்களுடன், விழிப்புணர்வுப் பலகைகள் ஏந்தி வலம் வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இப்பேரணி, இளைய தலைமுறையைப் பாதுகாப்பதும், போக்குவரத்து விதிமுறைகளைக் கடைப்பிடிப்பதும் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும் என்பதை வலியுறுத்தியது.

கல்லூரி முதல்வர் கேப்டன் முனைவர் சேது. சந்தோஷ்பாபு சிறப்புரையாற்றினார். போதைப்பொருள் பழக்கத்தின் தீமைகள் மற்றும் போக்குவரத்து அலட்சியத்தால் ஏற்படும் தவிர்க்கக்கூடிய உயிரிழப்புகள் குறித்து அவர் விரிவாக எடுத்துரைத்தார். இளைஞர்கள் முன்மாதிரியாக வாழ வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

போதைப் பொருள் ஒழிப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் முனைவர் அ.ஜெயராம் மற்றும் மக்கள் தொடர்புத்துறை அலுவலர்ஜி.யமுனா ஆகியோர் சிறப்பாக நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *