செய்திகள்

டிரம்புக்கு அமைதிக்கான பரிசு: கால்பந்து சம்மேளனம் வழங்கியது

Makkal Kural Official

வாஷிங்டன், டிச. 6–

நோபல் பரிசுக்காக காத்திருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு கால்பந்து சம்மேளனம் அமைதிக்கான பரிசை வழங்கியது.

அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா–பாகிஸ்தான் போர் உள்பட 8 போர்களை நிறுத்தியதாக தொடர்ந்து கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு கிடைக்கும் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். ஆனால் வெனிசுலாவின் எதிர்க்கட்சி தலைவர் மரியாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் டிரம்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா), அமைதிக்கான பரிசை வழங்கி உள்ளது. அடுத்த ஆண்டு ஜூன்–ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் உலக கோப்பை கால்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை வெளியீடு நிகழ்ச்சி வாஷிங்டனில் நடந்தது. இதில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் சார்பில் புதிதாக உருவாக்கப்பட்ட அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டது.மக்களை ஒன்றிணைத்து எதிர்கால சந்ததியினருக்கு நம்பிக்கையை கொண்டு வரும் தனிநபர்களை அங்கீகரிப்பதற்காக உருவாக்கப்பட்ட விருதாகும். இந்த விருதை டிரம்ப்புக்கு சர்வதேச கால்பந்து சம்மேளன தலைவர் கியானி இன்பான்டினோ வழங்கினார். அப்போது டிரம்புக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கப்பட்டது. தங்க கோப்பையும் வழங்கப்பட்டது.இதுதொடர்பாக இன்பான்டினோ கூறும் போது, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைவர் டிரம்ப். உலகம் முழுவதும் அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இது உங்கள் அமைதி பரிசு என்றார்.தனக்கு அமைதிக்கான பரிசு வழங்கப்பட்டதற்கு டிரம்ப் நன்றி தெரிவித்து கொண்டார். அப்போது அவர் கூறும்போது, இது உண்மையிலேயே என் வாழ்க்கையின் மிகப்பெரிய மரியாதைகளில் ஒன்றாகும். நான் பதவியேற்பதற்கு முன்பு அமெரிக்கா அதிகமாக சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தற்போது சிறப்பாக முன்னேறி வருகிறது என்றார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *