சென்னை, ஜன. 9–
சென்னையைச் சேர்ந்த பெண்ணிடம் போலீஸ் என கூறி மிரட்டி டிஜிட்டல் கைது செய்து, ரூ.20 லட்சம் அபகரித்த வழக்கில் 14 நாட்களுக்குள் ரூ.20 லட்சம் பணத்தை மேற்கு மண்டல சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் மீட்டனர்.
சென்னை நானக்யன் மெயின் ரோடு, அண்ணாமலை அவென்யு பகுதியைச் சேர்ந்த எஸ். லதா என்பவர் கடந்த 23.12.2025 அன்று மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையம் ஆஜராகி, கடந்த 20.12.2025ம் தேதி தன்னை 7999822036 என்ற செல்போன் எண்ணிலிருந்து தொடர்பு கொண்டு பேசிய நபர் சென்னை, தீவிரவாத தடுப்பு பிரிவு காவல்நிலையத்திலிருந்து பேசுவதாகவும், தன் மீது எப்ஐஆர் போடப்பட்டுள்ளதாகவும், காலை 11 மணிக்கு கைது செய்யப்போவதாகவும், மேலும் ஆதார் கார்டு எண்ணை பயன்படுத்தி தீவிரவாதிகளுக்கு பணபரிமாற்றம் செய்வதற்காக வங்கி கணக்கு தொடங்கியுள்ளதாகவும் கூறி தன்னையும் தனது கணவரையும் வீடியோ கால் வழியாக தொடர்பு கொண்டு மிரட்டினார். தொடர்ந்து 3 நாட்கள் தன்னையும் தனது கணவரையும் வெளி நபர்களிடம் பேச விடாமலும் தொலைபேசி அழைப்பை துண்டிக்க விடாமலும் பயம் எற்படுத்தினர்.
மேலும் எங்களுடைய வங்கி கணக்கில் உள்ள பணம் அனைத்தையும் அவர்கள் கொடுக்கும் வங்கி கணக்கில் உடனே பண பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றும் அதில் விசாரணை செய்துவிட்டு மீண்டும் பணத்தை உங்களது வங்கி கணக்கிற்கு அனுப்பி விடுவதாக கூறினார். எங்களுக்கு உதவி செய்வதாகவும் கூறியதால், 23.12.2025 அன்று தன்னுடைய ஐசிஐசிஐ வங்கிக்கு நேரில் சென்று அவர்கள் கொடுத்த வங்கி கணக்கில் பணம் ரூ. 20 லட்சம் காசோலை வழியாக டெபாசிட் செய்ததாகவும், பின்னர் நண்பரது உதவியுடன் விசாரித்தபோது தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து உடனடியாக சைபர் கிரைம் உதவி எண் 1930ல் புகார் பதிவு செய்துள்ளார் கூறியுள்ளார்.
அந்த புகார் மீது மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் மனு ஏற்பு ரசீது வழங்கப்பட்டு, காவல் ஆய்வாளரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மேற்கொண்ட விசாரணையில் புகார்தாரர் அனுப்பிய பணம் விசாகபட்டினத்தில் உள்ள ஐசிஐசிஐ வங்கி கணக்கிற்கு சென்றுள்ளது தெரியவந்தது. உடனடியாக சம்மந்தப்பட்ட வங்கியில் பேசி மேற்படி வங்கியில் புகார்தாரரின் பணம் முடக்கப்பட்டுள்ள விபரம் அறிந்து துரிதமாக செயல்பட்டு தொடர்ந்து வங்கியில் தொடர்புடைய வங்கி மேலாளர்களிடம் பேசியும், சைதாப்பேட்டை 11வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம் பரிந்துரையினை செய்து, நீதிமன்ற ஆணை பெற்றும் அதனை சம்மந்தப்பட்ட விசாகப்பட்டிணம் கிளை, ஐசிஐசிஐ வங்கிக்கு அனுப்பி புகார்தாரர் இழந்த ரூ.20 இலட்சம் பணத்தை அவருடைய வங்கி கணக்கிற்கு உடனடியாக திரும்பப் பெறப்பட்டது.
டிஜிட்டல் கைது வழியாக புகார்தாரர் இழந்த பணம் முழுவதையும் துரித விசாரணை மற்றும் தொடர் கண்காணிப்பினாலும், 14 நாட்களில் மீட்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. மேலும் இவ்வழக்கில் மனுதாரரை தொடர்பு கொண்டு பேசிய எதிரிகள் குறித்தும், அவர்கள் புகார்தாரரிடம் கொடுத்த வங்கி கணக்கு விவரங்கள் குறித்தும் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
![]()





