சென்னை, நவ. 24:
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழகத்தின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினராக பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள மாலதி லக்ஷ்மண் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
நியமனம் குறித்து பேசிய அவர், “அரசு அளித்துள்ள இந்த மிகப்பெரிய அங்கீகாரம் மிகுந்த உற்சாகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இசைத் துறைக்கு வலுவூட்ட என்னால் ஆன அனைத்து பங்களிப்பையும் வழங்கி, அனைவரின் ஒத்துழைப்போடு இசை மற்றும் இதர கலைகளை கற்கும் மாணவர்களை ஊக்குவிப்பேன்,” என்று தெரிவித்தார்.
திரைப்பட பின்னணி மற்றும் மேடைப் பாடகியான மாலதி லக்ஷ்மண், பல சூப்பர் ‘ஹிட்’ பாடல்களை (சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ் நடித்திருந்த ‘திருடா–திருடி’ படத்தில் தீனா இசையில் பாடிய ‘மன்மத ராசா… மன்மத ராசா…’ பாடல் பட்டிதொட்டிகளில் பட்டையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது) பாடியுள்ளதோடு, தன்னுடைய கணவர் லக்ஷ்மண் கடந்த நான்கு தசாப்தங்களாக வெற்றிகரமாக நடத்தி வரும் லக்ஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவில் முக்கிய அங்கமாக திகழ்கிறார்.
![]()





