டெல்லி, ஆகஸ்ட் 4 – ஜார்க்கண்ட் மாநிலத்தின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன், உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனையில் இன்று காலமானார். அவருக்கு வயது 80.
ஜார்க்கண்ட் தனி மாநிலமாக உருவாவதற்கு முக்கியக் காரணமாக இருந்த இவர், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (JMM) கட்சியின் நிறுவனர் ஆவார். பழங்குடியின மக்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அவர் ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவை. இதனால் அவரது ஆதரவாளர்கள் அவரை “திஷோம் குரு” (நாட்டின் ஆசிரியர்) என அழைத்தனர்.
அவரது அரசியல் வாழ்க்கையில், அவர் பலமுறை தும்கா மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மூன்று முறை மத்திய நிலக்கரித் துறை அமைச்சராகவும், மூன்று முறை ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்துள்ளார்.
தற்போதைய ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இவரின் மகனாவார். சோரனின் மற்றொரு மகனான முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் துர்கா சோரன், மறைந்துவிட்டார். துர்காவின் மனைவி சீதா சோரன் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார்.
சிபு சோரனின் மறைவுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
![]()





