டோக்கியோ, ஜூலை 4–
ஜப்பானின் டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் ஜப்பான் இருப்பதால், அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது. ஜப்பானின் தெற்கு பகுதியிலுள்ள டோகாரா தீவுகளுக்கு அருகே கடந்த 2 வாரங்களில் 900-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் 183 நிலநடுக்கம்
இது குறித்து ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, “ஜூன் 21 முதல் தொடங்கிய நில அதிர்வுகள் ஜூன் 30 வரையிலான நிலவரப்படி, ஒரே நாளில் அதிகபட்சமாக 183 நிலநடுக்கங்கள் ஜூன் 23ம் தேதி பதிவாகியுள்ளது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் ஜூன் 29 ந்தேதி 98 முறை நில அதிர்வுகள் மற்றும் ஜூன் 30 அன்று 62 அதிர்வுகள் பதிவாகியுள்ளன.
இதில் மிகப்பெரிய நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகளாக பதிவானது. மேலும் அடுத்த 30 ஆண்டுகளில் நன்காய் பள்ளத்தாக்கு பகுதியில் 75 முதல் 82 சதவீத சாத்தியத்துடன் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அரசு வலியுறுத்தியுள்ளது. இதற்காக, டோகாரா கடற்கரை பகுதியில் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.
![]()





