புதுடெல்லி, டிச. 5:
டெல்லியில் நடந்த உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் நடத்திய பேச்சுவார்த்தையில் பாதுகாப்பு, அணுசக்தி தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறைகளில் இருநாடுகளுக்கு இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தியா வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுக்கு, டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. புதினை ஜனாதிபதி திரவுபதி முர்மு – பிரதமர் மோடி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து, ராணுவ இசைக் கலைஞர்களின் இசையுடன் கூடிய ராணுவ அணிவகுப்பை புதின் பார்வையிட்டார். பின் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளை திரவுபதி முர்மு, புதினுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக புதினுடன் வருகை தந்துள்ள அந்நாட்டின் தூதுக்குழுவினரை புதின், திரவுபதி முர்முவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்கள் ஒவ்வொருவரிடமும் கைகளை குலுக்கி, திரவுபதி முர்மு வரவேற்றார்.
23வது இந்தியா – ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். பாலம் விமான நிலையத்தில் தரையிறங்கிய புதினை, பிரதமர் மோடி நேரில் சென்று வரவேற்றார். பின்னர் அவரது இல்லத்தில் புதினுக்கு விருந்து கொடுத்தார்.
காந்தி நினைவிடத்தில்…
ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சியை அடுத்து ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் அதிபர் புதின் மலர் தூவி வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில் புதின் கையெழுத்திட்டார்.
இதன் பிறகு டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும், அதிபர் புதினும் பங்கேற்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது பாதுகாப்பு, அணு சக்தி, தொழில்நுட்பம், வர்த்தகம், விண்வெளி உள்ளிட்ட துறைகள் தொடர்பாக இரு நாடுகள் இடையே 25 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்த மாநாட்டிற்கு பின், பிரதமர் மோடி அவருக்கு ஐதராபாத் இல்லத்திலேயே மதிய விருந்து அளிக்கிறார். அதன்பின் இரு நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் சந்தித்து பல்வேறு ஒப்பந்தங்கள் குறித்து பேச்சு நடத்துகின்றனர்.
இரவே மாஸ்கோ பயணம்…
உச்சி மாநாடு நிறைவடைந்த பின், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் விருந்திலும் ரஷ்ய அதிபர் புதின் கலந்து கொள்கிறார். அதன்பின் இன்று இரவு 9 மணிக்கு புதின புறப்பட்டு மாஸ்கோ செல்கிறார். உக்ரைன் போர் நடந்துக்கொண்டிருக்கும் மத்தியில் புதின் இந்தியா பயணம் மேற்கொண்டுள்ளார்.
![]()





