சென்னை, டிச. 22:
சென்னை பெருநகர காவல் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் சார்பில் விருகம்பாக்கம் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின் பேரில், மத்திய குற்றப்பிரிவு சைபர்கிரைம் துணை ஆணையாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா மேற்பார்வையில் மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் காவல் நிலையம் சார்பில் விருகம்பாக்கம், ஆற்காடு சாலையில் உள்ள ஒய்.எஸ். என்கிளேவ் அடுக்குமாடி குடியிருப்பில் பொதுமக்களுக்கு சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மத்தியகுற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் உஷா ராணி கலந்து கொண்டு டிஜிட்டல் கைது, ஆன்லைன் டிரேடிங் மோசடி, ஆன்லைன் முதலீடு மோசடி , மேட்ரிமோனியல் மோசடி, கிப்ட் மோசடி மற்றும் இதர ஆன்லைன் மோசடிகள் குறித்து தெளிவாக எடுத்து கூறியும், அதிலிருந்து பாதுகாத்து கொள்ளும் கண்ணியமான, பாதுகாப்பான டிஜிட்டல் பழக்கவழக்கங்களை மேம்படுத்தவும் நடைமுறை ஆலோசனைகள் வழங்கி பொதுமக்களுடன் கலந்துரையாடினார். மேலும் முக்கிய சைபர் பாதுகாப்பு நடைமுறைகளை எடுத்துரைக்கும் துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன. இதில் குடியிருப்பு நலச்சங்க நிர்வாகிகள் உட்பட சுமார் 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
இந்த நிகழ்ச்சி காவல் துறையினருக்கும் பொதுமக்களுக்குமிடையே ஒரு ஆரோக்கியமான உரையாடலை ஏற்படுத்தியும், சைபர் குற்றத்தினால் பாதிப்படையாமல் இருக்க அணுக வேண்டிய நடைமுறைகள், தரவுகளை சரிபார்த்து, உரிய விழிப்புணர்வு கையாளுதலுடன் பொதுமக்கள் ஆன்லைனில் விழிப்புடன் இருக்க ஊக்குவித்தது.
சென்னை பெருநகர காவல் சார்பாக பொதுமக்கள் ஆன்லைன் தளங்களில் பணம் செலுத்துவதற்கு முன் சரிபார்க்க வேண்டும் என்றும், ஆர்வத்தை தூண்டி உண்மையற்ற வருமானத்தை வழங்கும் மோசடிகளுக்கு எதிராக எச்சரிக்கையுடன் கவனம் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் சைபர் மோசடிகள் குறித்து 1930 என்ற எண்ணிலோ, www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது அருகிலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்திலோ புகார் அளிக்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
![]()





