சென்னை, ஜூலை 22–
சென்னை மெட்ரோ ரெயிலில் ஆகஸ்ட் 1 முதல் பழைய பயண அட்டையை பயன்படுத்த முடியாது என்றும் தேசியபொது போக்குவரத்து அட்டையை பயன்படுத்த வேண்டும் என்றும் சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் சிஎம்ஆர்எல் பயண அட்டை பயன்பாட்டிலிருந்து தேசியபொது போக்குவரத்து அட்டைக்கு மாற்றப்படவுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், மெட்ரோ இரயில்களில் பயணிக்க சிஎம்ஆர்எல் பயணஅட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை அறிமுகப்படுத்தியது. இதைத் தொடர்ந்து 1.08.2025 முதல் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு முழுமையாக மாற திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 41 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் சிஎம்ஆர்எல் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது. கியூஆர் பயணச்சீட்டுகள் மற்றும் பிற பயணச்சீட்டு பெறும் முறைகள் வழக்கம்போல் தொடரும். பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளவும். மேலும், பயண அட்டையின் இருப்புத் தொகை குறைந்தபட்ச மதிப்பை (ரூ.50/-க்கும் குறைவாக) அடையும் போது, சிஎம்ஆர்எல் பயண அட்டையை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயணச்சீட்டு கவுண்டர்களில் ஒப்படைத்து விட்டு இதற்குப் பதிலாக, பயணிகள் தேசியபொது போக்குவரத்து அட்டையை எவ்வித கட்டணமும் இல்லாமல் பெற்றுக்கொள்ளலாம். அத்துடன், பழைய பயண அட்டையின் வைப்புத்தொகை மற்றும் மீதமுள்ள தொகை புதிய தேசிய பொதுபோக்குவரத்து அட்டைக்கு மாற்றி கொண்டு பயணிகள் தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
![]()





