செய்திகள்

சென்னை நகரில் வீடுவீடாக நேரில் போய் மக்களிடம் ஸ்டாலின் உரையாடினார்

Makkal Kural Official

சென்னை, ஜூலை 3–

தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் மக்களைச் சேர்க்க நேரடியாக சந்தித்தார். இயக்கம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.

முதலமைச்சரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் வரவேற்ற பொதுமக்கள் “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை; இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம்” என்றனர். இதைக் கேட்டு முதல்வர் பெருமகிழ்ச்சியடைந்தார்.

“உங்களால் தான் தமிழ்நாடு கல்வி, தொழில் வளர்ச்சியிலும் பெண்கள் முன்னேற்றத்திலும், பொருளாதார வளர்ச்சியிலும் இந்தியாவில் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டை என்றும் தொடர்ந்து தாங்கள்தான் ஆட்சிபுரிய வேண்டும் என்பது பொதுமக்களின் விருப்பம்” என்று அவர்கள் கூறியதைக் கேட்டு மகிழ்ந்தார். இது குறித்து முதலமைச்சர் சமூக வலைதளப் பதிவில், ”தமிழ்நாட்டின் மண் மொழி – மானம் காக்க, சாதி – மதம் – அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், கழக மாவட்டச் செயலாளர்கள் – சட்டமன்ற உறுப்பினர்கள் – நாடாளுமன்ற உறுப்பினர்கள் – மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த இயக்கம் குறித்து பொதுமக்களிடம் சில கேள்விகள் அடங்கிய படிவங்களை முதலமைச்சர் வழங்கி இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைக் கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார்.

எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்று பொதுமக்களிடம் முதலமைச்சர் ஒரு கேள்வியை முன்வைத்தார். அப்பொழுது “தமிழ்நாடும் தமிழ்மொழியும் வளமாக இருந்தால்தானே நாம் நலமாக வாழ முடியும். எனவே, தமிழ்நாடும், மொழியும், நமது சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டியது மிக, மிக முக்கியம் என்று அவர்கள் பதிலளித்தார்கள். அதனைக் கேட்டதும் முதலமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு “அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த அரசும் பாடுபடுகிறது” என்று தெரிவித்தார்.

வாங்க… வாங்க…

மகிழ்ச்சியுடன் வரவேற்பு

அடுத்துள்ள வீட்டிற்குச் சென்றபோது முதலமைச்சரை எதிர்கொண்டு, மகிழ்ச்சியோடு வாங்க, வாங்க என்று அகமும் முகமும் மலர வரவேற்றவர்களை நோக்கி “ஓரணியில் தமிழ்நாடு” படிவத்தை அளித்து, மகளிர் தங்கள் உரிமைத் தொகை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களைக் காத்திடும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிடவும் வேண்டுமா? இல்லையா? என்று ஒரு கேள்வியை முதலமைச்சர் முன்வைத்ததும், அங்கே இருந்தவர்கள் “ஆமாம், ஆமாம் இந்த மகளிர் உரிமைத் தொகை எங்களின் தன்மானத்தைப் பாதுகாக்கிறது” என்று உரத்த குரலில் எழுச்சியுடன் கூறியதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்தார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வேர்களாகத் திகழும் விவசாயிகளையும், நெசவாளர்களையும், மீனவர்களையும் மற்றும் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திப் பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்றும் அவர்கள் கூறியதைக் கேட்டு முதலமைச்சர் மட்டுமல்லாமல், அங்கு உடனிருந்தவர்களும் பெரிதும் வியந்தார்கள்.

ஒவ்வொரு குடும்பமும்

நம்பி இருக்கிறது

அதே தெருவில் உள்ள அடுத்தடுத்த வீடுகளுக்கும் முதலமைச்சர் சென்றார். முதலமைச்சர் தம் வீடு தேடி வந்துள்ளார் என்பதை அறிந்து ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தவர்கள் அத்தனைபேருடைய முகத்திலும் மகிழ்ச்சிக்கலை பொங்கி எழுந்தது என்றால் அது மிகையில்லை. மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய அந்த மக்களிடம் முதலமைச்சர் மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவறையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் முதலியவைகளிலிருந்து நம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமா ?. வேண்டாமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பியதுதான் தாமதம், உடனடியாக அவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படி ஒரு கேள்வியே வேண்டாம்; நம் இளைஞர்கள்தான் நம் நாட்டின் வருங்காலச் செல்வங்கள், தலைவர்கள், நிபுணர்கள். அவர்களை நம்பித்தான் ஒவ்வொரு குடும்பமும் நம் நாடும் இருக்கிறது.

எனவே, அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருக்கும் உள்ள முக்கிய கடமையாகும் என்று கூறியதைக் கேட்டதும் முதலமைச்சர், இவர்களிடம் நாம் எதையும் கூறாமலேயே இவர்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டுவது போல் பதில் கூறி மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு நமக்குப் பெருமித உணர்வு தோன்றுகிறது என்று குறிப்பிட்டார்.

டெல்லி அதிகாரத்துக்கு

அடிபணியாமல்…

அதேபோல, டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் முதலமைச்சர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா? என்றும்,

இவையனைத்தும் சாத்தியப்பட – நிலையான ஆட்சியை வழங்கிட மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா? என்றும்

அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்பமும் ஓரணியில் தமிழ்நாடு என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? என்றும் கேள்விகளை எழுப்பியபோது அங்கிருந்த பொதுமக்கள் எல்லாம் ஆம் ! ஆம் ! என்று ஒரே குரலில் மறு மொழி கூறி, முதலமைச்சர் தொடங்கியுள்ள ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் என்றனர்.

மா.சுப்பிரமணியன்

இந்நிகழ்வின்போது, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கழக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *