சென்னை, ஜன. 19–
பொங்கல் கொண்டாடச் சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சிங்கப்பெருமாள் கோயில், ஜிஎஸ்டி சாலை எனப் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுதால் மக்கள் அவதி அடைந்தனர்.
தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை வந்ததால் சென்னையில் வசிக்கும் வெளியூரைச் சேர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.
பொதுமக்கள் சிரமமின்றிச் சொந்த ஊர்களுக்குச் செல்லச் சிறப்பு ரயில்களும் பேருந்துகளும் இயக்கப்பட்டனர். இதன் மூலம் கடந்த வாரம் பல லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதனால் பொங்கல் காலகட்டத்தில் சென்னை நகரே கிட்டத்தட்ட காலியானது எனச் சொல்லலாம். அந்தளவுக்கு வெறிச்சோடி இருந்தது.. பொங்கல் விடுமுறை முடிந்துவிட்ட நிலையில், நேற்று முன்தினம் ஒருசிலர் சென்னைக்குத் திரும்பனனர். இதனால் நேற்று காலை திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஏராளமான பொதுமக்கள் சென்னைக்குத் திரும்பினர். இன்று திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் பலரும் சென்னைக்குத் திரும்புவதால் பல்வேறு இடங்களிலும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளான சிங்கப்பெருமாள் கோவில் அருகிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. மதுராந்தகம், ஜிஎஸ்டி சாலையிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. இதனால் பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலையே இருக்கிறது. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அங்கிருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல மாநகர பேருந்துக்காக மக்கள் காத்து நிற்கும் நிலை ஏற்பட்டது.
சாலைகளில் மட்டுமின்றி ரயில்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குக் கிளம்ப ஏதுவாக பல ஊர்களில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. கிட்டத்தட்ட அனைத்துச் சிறப்பு ரயில்களிலும் டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துவிட்ட நிலையில், அதிலும் டிக்கெட் கிடைக்காத பொதுமக்கள் பொதுப் பெட்டியிலும் பயணிக்கிறார்கள். இதனால் ரயில்கள் முழுக்க கூட்டம் அலைமோதியது. இதனால் தாம்பரம் ரெயில் நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
![]()





