திண்டுக்கல், ஆக. 20–
திண்டுக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் இன்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருபுவனம் மேலத்தூண்டில் விநாயகம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவர் பாமக முன்னாள் நகர செயலாளர் ஆவார். மதமாற்றம் தொடர்பான மோதலில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக திருவிடைமருதூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, குறிச்சி மலையைச் சேர்ந்த முகம்மது ரியாஸ், நிஜாம் அலி, சர்புதின், முகமது ரிஷ்வான், அசாருதின் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர். .மேலும் இந்த வழக்கு தொடர்பாக 18 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. என்ஐஏ தனியாக வழக்குப் பதிவு செய்து 12 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில் ராமலிங்கம் கொலை வழக்குத் தொடர்பாக சென்னை, திண்டுக்கல், கொடைக்கானல், தென்காசி உள்ளிட்ட 10 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் பேகம்பூர் ஜின்னாநகரை சேர்ந்தவர் சேக்அப்துல்லா. இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். மேலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட பொருளாளராகவும் இருந்து வருகிறார். இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு வந்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர சோதனைக்கு பிறகு வீட்டில் இருந்த ஆவணங்கள், சேக்அப்துல்லா மற்றும் அவரது மனைவியின் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்றனர்.விசாரணை முடிவுற்ற நிலையில் வருகிற 25ந்தேதி சென்னையில் என்.ஐ.ஏ. அலுவலகத்திற்கு நேரில் ஆஜராக வேண்டும் என அவர்களுக்கு சம்மன் வழங்கப்பட்டது. இந்த சோதனையால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் ஏராளமானோர் அங்கு திரண்டு சோதனையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அங்கு வந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சிக்குட்பட்ட 12-வது வார்டு பகுதியான சம்சுதீன் காலனியில் எலக்ட்ரீசியன் வேலை செய்து வரும் முகமது யாசின் என்பவருடைய வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனியில் வசித்து வரும் முகமது யூசுப் என்பவரின் மகன் முகமது யாசின் (35) வீட்டில் இன்று அதிகாலை முதல் சுமார் 10க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். முகமது யாசின் என்பவர் ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எலக்ட்ரீசியன் வேலை பார்த்து வருகிறார். இவர் ஏற்கனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள இயக்கமான பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்ற இயக்கத்தில் உறுப்பினராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் அதிகாலையில் அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென உள்ளே நுழைந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முகமது யாசின் பயன்படுத்தி வரும் செல்போன் மற்றும் வீட்டில் உள்ள நபர்களின் தொலைபேசிகளையும், வீட்டில் உள்ள அவரின் முக்கிய ஆவணங்கள், டைரிகள், உள்ளிட்ட வைகளை கைப்பற்றி சோதனை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் நடைபெறும் இந்த சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இச்சம்பவத்தை அறிந்ததும் அப்பகுதியில் ஏராளமானோர் குவிந்தனர்.வத்தலக்குண்டு காந்திநகர் கணவாய்ப்பட்டி பஞ்சாயத்துக்குட்பட்ட குறிஞ்சி நகரில் உமர் கத்தாப் (72) என்பவர் வீட்டிலும் என்.ஐ.ஏ. சோதனை நடந்து வருகிறது. ராமலிங்கம் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இவரது மருமகன் முகமதுஅலிஜின்னா என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதன்பின் முகமது அலி ஜின்னாவின் மகள் நிஷா தற்போது தந்தை உமர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் டி.எஸ்.பி.சஞ்ஜீவ்மோன் தலைமையில் வந்த 5 பேர் கொண்ட அதிகாரிகளும், வங்கி அதிகாரிகள் 2 பேரும் சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இவர்களது வங்கி கணக்கிற்கு பணப்பரிமாற்றம் நடந்ததா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கொடைக்கானலில் 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை நடத்தப்பட்டது. கொடைக்கானல் பில்லிஸ் வில்லா பகுதியில் உள்ள 2 இடங்கள், அப்சர்வேட்டரி சாலை, கான்வென்ட் ரோடு மற்றும் மேல்மலை கிராமமான பூம்பாறை பகுதியில் ஒரு இடத்திலும் கொடைக்கானல் அண்ணா சாலையில் முபாரக் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர்.ஆம்பூர் பிரியாணி கடை வைத்து நடத்தி வரும் உரிமையாளர் இம்தாத்துல்லாவின் கொடைக்கானல் வீட்டிலும் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
![]()





