சென்னை, ஜன. 21–
சென்மைன சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலரின் துரித நடவடிக்கையால் எலி மருந்து சாப்பிட்ட பெண் பயணியின் உயிர் காப்பாற்றப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம், நடை மேடை எண் 11-ல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎப்) பெண் காவலர் ஜிஷா, சுமார் 25 வயதுடைய ஒரு இளம் பெண் பயணி தனியாக அமர்ந்து அழுதுக் கொண்டிருப்பதை கவனித்தார். சந்தேகத்திற்குரிய நிலையை உணர்ந்த காவலர், அந்தப் பயணியை அணுகி நுணுக்கமாக விசாரணை மேற்கொண்டார்.
அந்த விசாரணையில், சமீபத்தில் தனது சகோதரர் உயிரிழந்ததால் கடும் மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், எலி மருந்தை உட்கொண்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார். எப்போது மற்றும் எங்கு அந்த விஷத்தை உட்கொண்டார் என்பது உறுதியாக தெரியவில்லை.
நிலையின் தீவிரத்தை உணர்ந்த பெண் காவலர் ஜிஷா, உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொண்டு, அரசு ரயில்வே காவல் (ஜிஆர்பி), சென்னை சென்ட்ரல் பணியாளர்களின் உதவியுடன் அந்தப் பயணியை உடனடி மருத்துவ சிகிச்சைக்காக தனியார் அவசர மருத்துவமனைக்கு அனுப்பினார். பின்னர் மருத்துவர்களின் ஆலோசனையின்படி, மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
ஆர்.பி.எப். பெண் காவலரின் துரித நடவடிக்கை மற்றும் மனிதாபிமான செயல்பாட்டினால், அந்தப் பயணிக்கு உடனடி மருத்துவ உதவி கிடைத்தது. தற்போது அவரது உடல்நிலை நிலையாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.பி.எப். பெண் காவலர் ஜிஷா மற்றும் அரசு ரயில்வே காவல் பணியாளர்கள் காட்டிய துரித நடவடிக்கை, ஒரு மதிப்புமிக்க உயிரைக் காப்பாற்றுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
![]()





