செய்திகள்

சென்னை எழும்பூரில் தாளமுத்து–நடராஜன் சிலைகளை ஸ்டாலின் திறந்து வைத்தார்

Makkal Kural Official

மூலக்கொத்தளத்தில் மொழிப்போர் தியாகிகளுக்கு அஞ்சலி

சென்னை, ஜன. 25–

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளை முன்னிட்டு சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார்.

மேலும், சென்னை, எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள திருவாளர்கள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச்சிலைகளை திறந்துவைத்தார்.

இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்று உயிர் நீத்த தோழர்கள் நடராசன் மற்றும் தாளமுத்து ஆகியோரது தியாகத்தைப் போற்றும் வண்ணம் நினைவிடத்தை சென்னை மூலக்கொத்தளத்தில் தந்தை பெரியார் அடிகோலி திறந்து வைத்தார். இந்த நினைவிடத்தினைப் பொலிவேற்றம் செய்திடவும். ஜனவரித் திங்கள் 25ம் நாளை “தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாள்” என்னும் பெயரில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் எனவும் அறிவித்து ஆணையிடப்பட்டதைத் தொடர்ந்து, 25.1.2025 அன்று பொலிவேற்றம் செய்யப்பட்ட நினைவிடத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். மேலும், இந்நிகழ்வின்போது “மொழிப்போரின் வெற்றி வெளிச்சத்திற்கு ஒளிவிளக்குகளாய் நின்று உயிர்நீத்த தாளமுத்து– நடராசன் ஆகிய இருவருக்கும் சென்னை, எழும்பூரில் உள்ள தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் திருவுருவச்சிலை நிறுவப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.

அவ்வகையில், தமிழ்மொழித் தியாகிகள் நினைவு நாளினை முன்னிட்டு இன்றையதினம் முதலமைச்சர் சென்னை, மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள தமிழ்மொழித் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரின் நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்தினார். முன்னதாக தியாகிகள் நினைவு நாளையொட்டி நடைபெற்ற பேரணியில் கலந்துகொண்டு வீர முழக்கங்கள் எழுப்பினார். மேலும், மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள சமூகப் போராளி டாக்டர்.எஸ்.தருமாம்பாள் அம்மையாரது நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் சென்னை, எழும்பூர் தாளமுத்து – நடராசன் மாளிகை வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள மொழிப்போர் தியாகிகள் தாளமுத்து மற்றும் நடராசன் ஆகியோரது மார்பளவு திருவுருவச் சிலைகளை முதலமைச்சர் இன்று திறந்து வைத்தார். பின்னர், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் காட்சிகளைப் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சிகளில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மு.பெ. சாமிநாதன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் சுதர்சனம், தாயகம்கவி, ஆர்.டி.சேகர், ஜோசப் சாமுவேல், வெற்றியழகன், ஐட்ரீம் மூர்த்தி, கே.பி.சங்கர், க.கணபதி, அரவிந்த் ரமேஷ், ஏ.எம்.வி.பிரபாகரராஜா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் உறுப்பினர் செயலர்/முதன்மைச் செயலாளர் கோ.பிரகாஷ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் முதன்மை செயல் அலுவலர் அ.சிவஞானம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வே. ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா. வைத்திநாதன், தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ந. அருள், தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்தின் தலைவர் ப. ரங்கநாதன், மாணவர் அணி நிருவாகி ராஜீவ்காந்தி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர் என்று அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *