சென்னை, ஜூலை 20–
சென்னையில் செல்போன் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, பூக்கடை, பந்தர் தெருவில் புதிதாக கட்டுமானம் நடைபெறும் இடத்தில் வெளிமாநிலத்தைச்சேர்ந்த நாரயண்ராய், அவரது மகன் சத்யஜித் ராய் மற்றும் சிலருடன் தங்கியிருந்து கட்டுமான பணி செய்து வருகிறார். அந்த கட்டிடத்தில் நுழைந்த அடையாளம் தெரியாத நபர்கள் அங்கு 5 செல்போன்களை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து பூக்கடை காவல் நிலையகுற்றப்பிரிவில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட தமிழ்வாணன், சேரன், துரைபாண்டி, இளமாறன் ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 4 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
செல்போன் பறிப்பு:
சிறுவன் கைது
கொசப்பேட்டையைச் சேர்ந்த 18 வயது பெண் ஒருவர் திரு வி.க. தெருவில் உள்ள ஓட்டுநர் பயிற்சி பள்ளி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, டியோ இருசக்கர வாகனத்தில் வந்த 2 வாலிபர்கள், அந்த பெண்ணின் செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஓட்டேரி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து, செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 17 வயது இளஞ்சிறாரை கண்டறிந்து விசாரணை செய்தனர். விசாரணையில் இளஞ்சிறார் அவரது நண்பருடன் சேர்ந்து மேற்படி செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், அவரிடமிருந்து புகார்தாரரின் செல்போன் மீட்கப்பட்டு, குற்றச் செயலுக்கு பயன்படுத்திய டியோ இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இளஞ்சிறார் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டான்.
![]()





