செய்திகள்

சென்னையில் ஆன் லைன் வர்த்தகத்தில் ரூ. 12 லட்சம் மோசடி: பெண் உள்பட 3 பேர் கைது

Makkal Kural Official

சென்னை, டிச. 6–

ஆன்லைன் வர்த்தகம் மற்றும் பண முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக கூறி ரூ.12 லட்சம் பெற்று மோசடி செய்த பெண் உட்பட 3 பேரை மேற்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

சென்னை, நொளம்பூர், ஸ்ரீராம் நகர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த சௌந்தராஜன், தனது முகநூல் பக்கத்தை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆன்லைன் வழியாக வர்த்தகம் செய்தும், ஸ்டாக் மார்க்கெட்டில் பண முதலீடு செய்து ஸ்டாக்குகளை வாங்கி குறைந்த காலத்தில் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று என்ற விளம்பரத்தை பார்த்தும் அதன் கீழே வாட்ஸ் அப் குழுவிற்கான இணைப்பு (லிங்க்) இருந்ததால், அந்த இணைப்பை கிளிக் செய்து, அந்த வாட்ஸ் அப் குழுவில் இணைந்தார். இக்குழுவில் 103 நபர்கள் இருந்த நிலையில், ஆரோயி நம்பூதரி மற்றும் செகய் ஆகியோர் அட்மின்களாக இருந்து பங்கு வர்த்தகம் செய்வதற்கும், பணத்தை முதலீடு செய்வது குறித்து வாட்ஸ் அப் குழுவில் ஆலோசனைகள் மற்றும் ஆசை வார்த்தைகள் கூறியதை நம்பி 30.09.2025 முதல் 22.10.2025 வரை 6 தவணைகளாக தனியார் வங்கிகளின் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.12 இலட்சம் அனுப்பினார். அதன் பின்னர் இலாபத்தை தராமல், செலுத்திய பணத்தையும் தராமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து, அந்த நபர்களை கண்டறிந்து தனது பணத்தை மீட்டு தரும்படியும் தேசிய சைபர் கிரைம் இணையத்தில் புகார் அளித்தார்.

சென்னை பெருநகர காவல், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண் உத்தரவின்பேரில், மேற்கு மண்டல இணை ஆணையாளர் வழிகாட்டுதலின்பேரில், மேற்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் புகாரில் கூறப்பட்ட வங்கி கணக்கு பயனாளர்களின் விவரங்களை கொண்டு தீவிர விசாரணை நடத்தி, அந்த வழக்கில் தொடர்புடைய வளவன், சுமி, கார்த்திகேய ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் பயன்படுத்தி வந்த 3 தனியார் வங்கி கணக்குகள் மீது தேசிய சைபர் கிரைம் இணையதளத்தில் இதுவரை 138 புகார்கள் மனுக்கள் இந்தியா முழுவதும் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும், கார்த்திகேயன் மீது வேப்பேரி, விருகம்பாக்கம், அம்பத்தூர் காவல் நிலையங்களில் சுமார் 7 திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட 3 பேரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *