சென்னை, டிச. 30:
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரெயில் சேவையானது நீலம் மற்றும் பச்சை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் மற்றும் பரங்கிமலைக்கு பச்சை வழித்தடத்தில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. அதேபோல் விம்கோ நகரில் இருந்து சைதாப்பேட்டை வழியாக விமான நிலையத்துக்கு நீல வழித்தடத்தில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பச்சை வழித்தட மெட்ரோ ரெயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:– தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு வழியாக விமான நிலையம் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பச்சை வழித்தடம் (அண்ணா நகர், கோயம்பேடு வழியாக) வழியாக விமான நிலையத்திற்கு செல்லும் பயணிகள் ஆலந்தூர் மெட்ரோ நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து நீல வழித்தடத்தை பயன்படுத்தி விமான நிலையம் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோளாறை சரிசெய்ய தொழில்நுட்பப் பணியாளர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். விரைவில் கோளாறு சரிசெய்யப்பட்டு, சேவை இயல்பு நிலைக்கு திரும்பும். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் வருந்துகிறோம்.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
![]()





