சென்னை, செப்.7–
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை உறுதியாக சந்திப்பேன் என்று முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பிரிந்து சென்ற டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து பேச தயாராக உள்ளதாக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது: நயினார் நாகேந்திரன் நல்ல மனிதர். அவரின் முயற்சிக்கு வாழ்த்துகள்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கண்டிப்பாக சந்திப்பேன். அவருக்கு முழு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம். ஒருங்கிணைப்பு தொடர்பான 10 நாட்கள் கெடு முடிந்ததும் செங்கோட்டையன் தன்னிடம் பேசுவார் என நம்பிக்கை உள்ளது. அண்ணா தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். செங்கோட்டையன் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு உண்டு. இவ்வாறு அவர் கூறினார்.
அண்ணா தி.மு.க. வின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை கட்சியின் பல்வேறு பொறுப்புகளிலிருந்து நீக்கி அண்ணா தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டிருந்த நிலையில் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கட்சி நிர்வாகிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ராஜினாமா செய்து, கடிதத்தை கட்சியின் தலைமைக்கு அனுப்பி வருகின்றனர்.
![]()





