கேங்டாக், செப்.12–
சிக்கிமில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேற்கு சிக்கிம், யாங்தாங் தொகுதிக்குள்பட்ட ரிம்பி பகுதியில் பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இடைவிடாத மழை இருந்தபோதிலும், சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் உள்ளூர் மக்கள் உதவியுடன் நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இடிபாடுகளில் சிக்கி, ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர். இவர்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் மாயமான 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அடைவதற்கான பாலம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தாமதமாகின.
சம்பவ இடத்துக்கு விரைந்த எஸ்எஸ்பி பாதுகாப்புப் படையினர் காவல்துறையினருடன் இணைந்து ஆற்றை கடக்க தற்காலிக மரப் பாலத்தை அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த 2 பெண்களை மீட்டு மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதில், ஒருவர் சிகிச்சைப் பலனின்றி பலியான நிலையில், மற்றொருவர் கவலைக்கிடமாக உள்ளார்.
![]()





