நியூயார்க், ஜன. 4:
அமெரிக்கப் படைகளால் வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிறைப்பிடிக்கப்பட்டிருக்கின்றனர். இது சர்வதேச சட்டமீறல் என்று அதிபர் டிரம்பிற்கு நியூயார்க் மேயர் மம்தானி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நாடு கடத்தப்பட்ட நிக்கோலஸ் மதுரோ நியூயார்க்கிற்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அங்கே அவர் மீதிருக்கும் போதை மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட உள்ளன. இந்தத் தாக்குதல் கைது நடவடிக்கைக்கு எதிராக அமெரிக்காவில் இருந்தே கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.
நியூயார்க் நகர மேயர் சோஹ்ரான் மம்தானி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, அதிபர் டொனால்ட் டிரம்புடன் நேரடியாகப் பேசினேன். இது இறையாண்மை கொண்ட நாட்டின் மீதான ஒருதலைப்பட்சத் தாக்குதல் போர் நடவடிக்கை. இந்தச் செயலுக்கு எனது எதிர்ப்பைப் பதிவு செய்ய நான் அதிபரை அழைத்து அவரிடம் நேரடியாகப் பேசினேன்.
எனது எதிர்ப்பைப் பதிவு செய்தேன். அதைத் தெளிவாகத் தெரிவித்தேன். அரசு மாற்றத்திற்கான அப்பட்டமான முயற்சி இது. இந்த நடவடிக்கை மத்திய மற்றும் சர்வதேச சட்ட மீறலாகும். இந்த நடவடிக்கை வெளிநாடுகளில் உள்ளவர்களை மட்டும் பாதிக்கவில்லை, இது இந்த நகரத்தைத் தங்கள் வீடாகக் கருதும் பல்லாயிரக்கணக்கான வெனிசுலா நாட்டினர் உட்பட நியூயார்க் நகர மக்களையும் நேரடியாகப் பாதிக்கிறது.
அவர்களின் பாதுகாப்பிலும், ஒவ்வொரு நியூயார்க் நகரவாசியின் பாதுகாப்பிலும்தான் எனது கவனம் உள்ளது. எனது நிர்வாகம் இந்தச் சூழ்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து, தொடர்ந்து வழிகாட்டுதல்களை வழங்கும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.கமலா ஹாரிஸ் கண்டனம்
வெனிசுலா மீதான இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“வெனிசுலாவில் டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட நடவடிக்கைகள் அமெரிக்காவை பாதுகாப்பானதாகவோ, வலிமையானதாகவோ மாற்றவில்லை. மதுரோ ஒரு கொடூரமான சர்வாதிகாரி என்பதால் இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது மற்றும் விவேகமற்றது என்ற உண்மை மாறிவிடாது.
இந்த காட்சிகளை நாம் முன்பே பார்த்திருக்கிறோம். ஆட்சி மாற்றத்திற்காக அல்லது எண்ணெய்க்காக நடத்தப்படும் போர்கள் குழப்பமாக மாறும். அமெரிக்க குடும்பங்கள் அதற்கான விலையை செலுத்த வேண்டியிருக்கும். அமெரிக்க மக்கள் இதை விரும்பவில்லை. அவர்கள் பொய்களைக் கேட்டு சோர்வடைந்துள்ளனர்.
இது போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றியது அல்ல. இது எண்ணெய் மற்றும் பிராந்திய வலிமையை நிரூபிக்க விரும்பும் டொனால்டு டிரம்ப் பற்றியது. போதைப்பொருள் அல்லது ஜனநாயகம் பற்றி டிரம்ப் அக்கறை கொண்டிருந்தால், ஒரு போதைப்பொருள் கடத்தல்காரரை மன்னிக்கவோ அல்லது மதுரோவின் கூட்டாளிகளுடன் ஒப்பந்தங்களை தொடர்ந்து கொண்டு, வெனிசுலாவின் நியாயமான எதிர்ப்பை ஒதுக்கி வைக்க மாட்டார்.
அதிபர் டிரம்ப் ராணுவ படைகளை ஆபத்தில் ஆழ்த்துகிறார், கோடிகளை செலவிடுகிறார், ஒரு பிராந்தியத்தை சீர்குலைக்கிறார். உழைக்கும் குடும்பங்களுக்கான செலவுகளைக் குறைத்தல், சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்துதல், கூட்டணிகளை வலுப்படுத்துதல் மற்றும் – மிக முக்கியமாக – அமெரிக்க மக்களை முதன்மைப்படுத்துதல் ஆகியவற்றை முன்னுரிமைப்படுத்தும் தலைமை அமெரிக்காவிற்குத் தேவை இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
![]()





