சென்னை, ஜூலை 16–
கொடுங்கையூரில் வாலிபரை கத்தியால் குத்தி கொலை செய்த வழக்கில் 2 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, எம்.கே.பி. நகர், புது நகர் 10வது தெருவைச் சேர்ந்த சங்கர் (20). கொடுங்கையூர், எருக்கஞ்சேரி, ஜிஎன்டி சாலையிலுள்ள அம்மா உணவகம் பின்புறமுள்ள காலி மைதானத்தில் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடப்பதாக கிடைத்த தகவலின்பேரில், கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கரின் பிரேதத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து, இறந்துபோன சங்கரின் தாயார் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இக்கொலை வழக்கில் தொடர்புடைய நித்தின்குமார், ஸ்டீபன்ராஜ், லிங்கேஷ்வரன், ஜாபர் அகமது, பாலாஜி, நவீன் (எ) பாலா ஆகிய 6 பேரை கைது செய்தனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 2 இளஞ்சிறார்களிடம் விசாரணை செய்தனர். இவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இறந்துபோன சங்கர் தனது பிறந்த நாளையொட்டி கொடுங்கையூர், இந்திராகாந்தி நகரில் கேக் வெட்டி கொண்டாடியபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஸ்டிபன், நித்தின், லிங்கேஷ் ஆகியோருக்கும், சங்கருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சம்பவத்தன்று அதிகாலை, சங்கர் அவரது நண்பர்களுடன் மேற்படி சம்பவ இடமான அம்மா உணவகம் பின்புறமுள்ள காலி இடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஸ்டீபன், நித்தின், லிங்கேஷ் உட்பட சுமார் 10 பேர் சங்கரை கத்தியால் தாக்கும்போது, நண்பர்கள் தப்பியோடவே, எதிரிகள் சங்கரை கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 6 பேர் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும் 2 இளஞ்சிறார்கள் சிறார் நீதிக்குழுமத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மற்ற தலைமறைவு எதிரிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர்.
![]()





