சென்னை, ஜன.20–
கிராம மக்களுக்கு அத்தியாவசியமான மற்றும் முழுமையான மருத்துவ சேவைகளை வழங்கும், நோக்கத்தோடு இந்தியாவின் முதல் மருத்துவப் பேருந்தை ‘சிம்ஸ் ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ என்ற பெயரில் தமிழ்நாட்டின் பிரபல மருத்துவமனைகளுள் ஒன்றான சிம்ஸ் மருத்துவமனை அறிமுகப்படுத்தியுள்ளது என்று தலைவர் ரவி பச்சமுத்து தெரிவித்தார்.
தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜாமற்றும் எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர்டாக்டர். ரவி பச்சமுத்து ஆகியோர் முன்னிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இந்த மருத்துவப் பேருந்து சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சேவை பெறுவதற்காக நோயாளிகள் பதிவு செய்தல், மருத்துவ ஆலோசனை, நோயறிதல், மேல் சிகிச்சைக்கான பரிந்துரைகள் மற்றும் தொடர் சிகிச்சைகள் என அனைத்தும் காகிதமில்லா முறையில்டிஜிட்டல் வடிவில் தடையின்றி மேற்கொள்ளப்படுவது இந்த நடமாடும் மருத்துவப் பிரிவின் சிறப்பம்சம் ஆகும். இதனால் கிராமப்புற மக்கள் நகரங்களுக்கு நீண்ட தூரப் பயணம் அல்லது நீண்ட நேரக் காத்திருப்பு இல்லாமல் தரமான மருத்துவ சிகிச்சையை தங்கள் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே பெற முடியும். இப்பேருந்தில் சிறப்பு மருத்துவர்களுடன் நேரலை வீடியோ மூலம் ஆலோசனை பெறுதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தடுப்பூசி சேவைகள் மற்றும் ஆரம்ப கட்டத்திலேயே உடல்நல அபாயங்களைக் கண்டறியும் முன்தடுப்பு பரிசோதனை வசதிகள் உள்ளன என்றார் ரவி பச்சமுத்து.
‘மிஷன் சிம்ஸ் வில்லேஜ்’திட்டத்தின் கீழ், கிராமங்களைத் தேர்ந்தெடுத்து, இந்தப் பேருந்து மூலம் தொடர்ச்சியான மருத்துவ சேவைகளை சிம்ஸ் மருத்துவமனை வழங்கவுள்ளது. 044 20012001 என்ற எண்ணை அழைப்பதன் மூலம் இச்சேவையை பொதுமக்கள் பெற்றுப் பயனடையலாம்.
இந்நிகழ்ச்சியில்பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், “மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று சிம்ஸ் மருத்துவமனை மருத்துவ சேவைகளை வழங்குவதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்துவதில் ‘ஹலோ டாக்டர் – ஹெல்த் ஆன் வீல்ஸ்’ போன்ற முன்னெடுப்புகள் முக்கிய பங்காற்றுகின்றன. அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய, நோய் தடுப்பை மையமாகக் கொண்ட மற்றும் எளிதில் அணுகக்கூடிய இத்தகைய சேவைகளே மருத்துவத் துறையின் எதிர்காலத்தை சுட்டிக் காட்டுகின்றன.
எஸ்ஆர்எம் குழுமத்தின் தலைவர் ரவி பச்சமுத்து பேசுகையில், “மருத்துவமனையின் சுவர்களுக்கு அப்பால், நோயாளிகள் எங்கு இருக்கிறார்களோ அங்கேயே சென்று தேவைப்படும் நேரத்தில் அவர்களுக்குச் சேவை செய்வதே சிம்ஸ் மருத்துவமனையின் நோக்கமாகும் என்றார்.
![]()





