செய்திகள்

காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு: சிபிஐ அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Makkal Kural Official

மதுரை, ஆக. 20–

நகை திருட்டு தொடர்பான விசாரணையின் போது உயிரிழந்த அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு ஜூன் 27–ந் தேதி வந்த பேராசிரியை நிகிதாவின் காரில் இருந்த நகை திருடு போனது. இது தொடர்பான மானாமதுரை உட்கோட்ட குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் விசாரணையின் போது கோயில் பாதுகாப்பு நிறுவன ஊழியர் அஜித்குமார் ஜூன் 28–ந் தேதி உயிரிழந்தார்.

இந்த வழக்கு தொடர்பாக ஜூலை 12 முதல் சி.பி.ஐ., டி.எஸ்.பி., மோஹித்குமார் தலைமையிலான அதிகாரிகள் விசாரிக்கின்றனர். மதுரை ஐகோர்ட் உத்தரவுப்படி ஆகஸ்ட் 20க்குள் விசாரணை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து சி.பி.ஐ., அதிகாரிகள் திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷன் தொடங்கி மடப்புரம் கோயில் வரையிலான பாதையில் உள்ள சி.சி.டி.வி.,காட்சிகள், உயிரிழந்த அஜித்குமாருடன் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் என 23 சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றனர். இந்த வழக்கு தொடர்பாக ஜூன் 30ல் தனிப்படை போலீசார் கண்ணன், ராஜா, பிரபு, ஆனந்த், சங்கரமணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன், மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரம் ஆகியோர் ஜூலை 1 முதல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை சி.பி.ஐ. அதிகாரிகள் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக இறுதி குற்றப்பத்திரிகையை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அந்த குற்றப்பத்திரிகையில் உள்ள தகவல்கள் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *