சென்னை, ஜன.19-–
காணும் பொங்கல் நாளில் ரூ.220½ கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
தமிழகத்தில் 4 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட ‘டாஸ்மாக்’ கடைகள் இயங்கி வருகின்றன. தினந்தோறும் ரூ.100 கோடி வரைக்கும், வார இறுதி நாட்களில் ரூ.150 கோடி வரைக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. பண்டிகை காலங்களின்போது மது விற்பனை அதிகரிக்கும்.
அதன்படி பொங்கலை பண்டிகையையொட்டி ‘டாஸ்மாக்’ கடைகளில் கடந்த 14, 15 ஆகிய 2 நாட்களில் மட்டும் ரூ.435 கோடியே 28 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையானது.
திருவள்ளுவர் தினமான கடந்த 16-ந்தேதி அன்று ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இந்தநிலையில் காணும் பொங்கலான நேற்று முன்தினம் மட்டும் ரூ.220 கோடியே 58 லட்சத்துக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
இதில் திருச்சி மண்டலத்தில் ரூ.53.58 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் ரூ.50.98 கோடிக்கும், சென்னை மண்டலத்தில் ரூ.41.08 கோடிக்கும், மதுரை மண்டலத்தில் ரூ.38.96 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.30.74 கோடிக்கும் விற்பனை நடைபெற்றுள்ளது. மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.5.24 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகி உள்ளது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை யையொட்டி 3 நாட்களில் (14, 15 மற்றும் 17-ந்தேதிகளில்) மட்டும் ரூ.655 கோடியே 86 லட்சத்துக்கு மது விற்பனையாகி இருக்கிறது.
கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகை யின்போது ரூ.518 கோடிக்கு மது விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது
![]()





